தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் தாக்கல் செய்துள்ளார்
மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் 13 குற்றச்சாட்டுகளுடன் கூடிய குற்றப்பத்திரிகையை அவர் இன்று (26) தாக்கல் செய்திருந்தார்.
2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி காலத்தில், பொய்யான மருந்துத் தட்டுப்பாட்டை உருவாக்கி, நிலவும் கொள்முதல் நடைமுறைகளை மாற்றி, உயர் மட்ட சுகாதார அதிகாரிகள் சிலர் தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் கண்டி, மாத்தளை, கொழும்பு நகரங்களில் இம்யூனோகுளோபுலின் மருந்து பயன்படுத்திய மூன்று நோயாளிகள் உடல்நலக்கோளாறுகளை எதிர்கொண்டதை அடுத்து, மருந்துகளின் தரம் குறித்து சந்தேகங்கள் எழுந்தன.
இச்சம்பவத்தை அடுத்து, கிடைக்கப் பெற்ற இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணையை ஆரம்பித்தது.
பின்னர், மாளிகாகந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், மருந்துகளை வழங்கிய நிறுவன உரிமையாளர் சுதத் ஜனக பெனாண்டோ, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவ், முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட 12 பேர் சந்தேகநபர்களாக பெயரிபட்டனர்.
இந்த வழக்கில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், பிரதான சந்தேகநபரான மருந்து விநியோகஸ்தர் தற்போது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி, விசாரணையின் முடிவை நீதிமன்றத்தில் அறிவித்த பிரதி சொலிசிட்டர் நாயகம் லக்மினி கிரிஹாகம, குற்றப் புலனாய்வு திணைக்களம் ஒரு வருடம் 8 மாதங்கள் 6 நாட்கள் விசாரணை நடத்திய பின்னர் தற்போது அவ்விசாரணையை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் மஹேன் வீரமன், அமாலி ரணவீர, பிரதீப் அபேரத்னே ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment