கிழக்கு இந்தோனேசியாவின் சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து 24 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை நேற்று (17) முதல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.
எரிமலை வெடித்து சிதறி வானத்தில் கோபுரம் போன்று 10 கிலோ மீற்றர் உயரத்துக்கு அதன் சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் அவுஸ்திரேலியாவுக்கான ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் விமான சேவைகளும் அடங்கும்.
ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜுன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக பாலியின் சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது.
புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்படும் பல உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.
லெவோடோபி லக்கி-லக்கி எரிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் எரிமலை சாம்பல் மழை பொழிந்துள்ளது.
மேலும், ஒரு கிராமத்திலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment