நாட்டின் மிகப்பெரிய உள்ளூராட்சி மன்றமான கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை யார் அமைப்பார்கள் என்பது இன்று (16) தீர்மானிக்கப்படவுள்ளது.
கடந்த மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கட்சி வென்றி கொண்டது. ஆனால், அந்தக் கட்சியால் பெரும்பான்மையான சபை உறுப்பினர்களைப் பெற முடியவில்லை. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் நிலையிலும் தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையை தமது கட்டுப்பாட்டுக்கள் அமைக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மேல் மாகாண சபை ஆணையாளர் இன்று (16) மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான ஆரம்ப கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி, இன்று (16) காலை 9.30 மணிக்கு மாநகர சபை மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் 48 ஆசனங்களை வென்றி கொண்டது. ஜக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களை கைப்பற்றியது. ஐ.தே.க. 2 பிரிவுகளை வென்று 13 ஆசனங்களை பெற்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களையும், சுயேச்சைக் குழு 3 ஆசனங்களையும், அனைத்து மக்கள் சக்தி, ஐக்கிய அமைதி முன்னணி, சுயேச்சைக் குழு 4 மற்றும் சுயேச்சைக் குழு 5 ஆகியன தலா 2 ஆசனங்களையும், சுயேச்சைக் குழு 2, சுயேச்சைக் குழு 1, ஜனநாயக தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் ஐக்கிய குடியரசுக் கட்சி ஆகியன தலா 1 ஆசனத்தையும் வென்றன.
தேசிய மக்கள் சக்தி சார்பாக, முதல் பதவிக்கு விராய் கெல்லி பல்தசார் போட்டியிடும் அதேநேரத்தில், ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பாக ரீசா பருக் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை ஆட்சியைப் பெற, ஒரு கட்சி மொத்தமுள்ள 117 உறுப்பினர்களில் 59 உறுப்பினர்களை வெற்றி கொள்ள வேண்டும். இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய உள்ளூராட்சி மன்றமான கொழும்பு மாநகர சபையை யார் அமைக்கப்போகின்றார்கள் என்பது இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக சார்லஸ் பீட்டர் லேயார்ட் 1866 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின்னர் 1950 ஆம் ஆண்டில் முதல் மேயராக கலாநிதி குமாரரத்னம் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1954 ஆம் ஆண்டில் கலாநிதி என்.எம்.பெரேரா மாநகர முதல்வராக நியமிக்கப்பட்டார்.
1956 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி முதல் முறையாக கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்றியது. அக்கட்சி சார்பில் பி.ஏ.சுகததாச முதல்வரானார்.
அதன் பின்னர், 2006 வரை தொடர்ந்து மாநகர சபையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.தே.க.வின் வேட்புமனுக்கள் அந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்டன.
கண்ணாடி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக்குழு, ஐ.தே.க.வின் ஆதரவுடன் மாநாகர சபையை வென்றதுடன் அதன் தலைவர் உவைஸ் முகமது முதல்வராக தெரிவானார்.
பின்னர், இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐ.தே.க. மீண்டும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற்றதுடன் உறுப்பினர் திருமதி ரோசி சேனநாயக்க முதல்வரானார்.
No comments:
Post a Comment