கொரோனா புதிய வகை திரிபுகளால் பாதிக்கப்பட்ட இருவரை அடையாளம் கண்டுள்ளதாக இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவனம் (MRI) தெரிவித்துள்ளது.
இவர்களிருவரும் புதிய ஒமிக்ரான் துணை திரிபுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
ஆசியாவின் பல பகுதிகளில் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட இந்த துணை வகை கொவிட் திரிபு, தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைமுறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் மருத்துவ நோய் ஆய்வுப் பிரிவு இது தொடர்பாக தெரிவிக்கையில், இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் வழக்கமான கண்காணிப்பின் ஒரு பகுதியாக இவை அடையாளம் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொடர்ந்து உருவாகி வருவதால், இவ்வாறான புதிய துணை வகைகளின் தோற்றம் எதிர்பாராதவை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ‘தற்போது இந்த புதிய திரிபு தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. சுகாதார அமைச்சு இது குறித்து விழிப்புடன் இருக்கிறது.
தொடர்ச்சியான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு மூலம் வைரஸ் பிறழ்வுகளைக் கண்காணிப்பதில் உறுதியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகிறது.
விசேடமாக முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் முகக் கவசத்தை அணிவது மற்றும் பொது கூட்டங்களைத் தவிர்ப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை , காலி தேசிய மருத்துவமனையில் ஒன்றரை மாதக் குழந்தை இறந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவனம் நடத்திய பரிசோதனையில், குழந்தைக்கு கொவிட்-19 தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளன. இருப்பினும் இதிலுள்ள திரிபு புதிதாக அடையாளம் காணப்பட்ட துணை வகைகளுடன் தொடர்புடையதல்ல என்று சுகாதார அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment