கட்சி அரசியலில் இருந்து முற்றாக நீங்கிக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், சமூக சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க இன, மத, மொழி, கட்சி பேதமின்றி எந்தவொரு தரப்பினருக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பல்வேறு விடயப்பரப்புகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பார்க்கீர் மார்க்கார் ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய ”மனச்சாட்சி” எனும் நூல் வெளியிட்டு நிகழ்வு நேற்று (25) கொழும்பில் உள்ள இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது விசேட உரையாற்றிய போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒய்வு பெற்ற சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாலித பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ், மற்றும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், நான் கட்சி அரசியலில் இருந்து முற்றாக நீங்கி கொள்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளேன். எனது இந்த தீர்மானம் வேறு ஒரு அரசியல் கட்சியுடன் இணைவதற்கோ அலல்து புதிய அரசியல் பயணமொன்றை ஆரம்பிப்பதற்கோ அல்ல.
நான் சமூகம் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவேன். சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முன்னின்று செயற்படுவேன். இதற்காக இன, மத, மொழி, கட்சி பேதமின்றி எந்தவொரு தரப்பினருக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறேன் என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment