காசாவில் உதவிக்கு காத்திருந்தவர்கள் மீதான தாக்குதல்களில் உயிரிழப்பு 300 ஆக அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 16, 2025

காசாவில் உதவிக்கு காத்திருந்தவர்கள் மீதான தாக்குதல்களில் உயிரிழப்பு 300 ஆக அதிகரிப்பு

ஈரானுடனான உக்கிர மோதலுக்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு நேற்று (16) காலை தொடக்கம் இடம்பெற்ற குண்டு மழையில் 45 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில் அதில் பாதி அளவானவர்கள் உதவி விநியோக நிலையங்களுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே பலியாகி இருப்பதாக காசா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய காசாவின் நட்சரிம் தாழ்வாரம், தெற்கே ரபா நகர் மற்றும் வட மேற்கே அல் சுதானியாவில் உள்ள உதவிகள் வரும் வாயில் உட்பட அமெரிக்க ஆதரவில் முன்னெடுக்கப்படும் சர்ச்சைக்குரிய உதவி விநியோக இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 23 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் நட்சரிம் தாழ்வார பகுதியில் உதவி விநியோக நிலையத்திற்கு அருகே ஒன்றுதிரண்ட மக்கள் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மத்திய காசாவில் உள்ள அல் அவ்தா வைத்தியசாலைக்கு எட்டு சடலங்கள் வந்ததாகவும் மேலும் 125 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முஹமது அல் முகையில் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

காசாவுக்கான அனைத்து உதவிகளையும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் முடக்கிய நிலையிலேயே காசா மனிதாபிமான நிறுவனம் என்ற இந்த அமைப்புக்கு உதவிகளை விநியோகிக்க இஸ்ரேல் அனுமதித்தது. ஐ.நா. மற்றும் மற்ற பிரதான தொண்டு அமைப்புகளின் உதவி விநியோகத்திற்கு மாற்றாகவே இந்த அமைப்பு இயங்கி வருகிறது.

எனினும் எந்த ஒரு அடிப்படை தேவைகளும் இன்றி பட்டினியில் திரளும் மக்கள் மீது இஸ்ரேலியப் படை தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு இவ்வாறான தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 300 ஐ எட்டி இருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. தவிர, 2,649 பேர் காயமடைந்துள்ளனர்.

பட்டினியில் உள்ள பொதுமக்களை திட்டமிட்டு இலக்கு வைக்கும் அமெரிக்க ஆதரவு உதவி நிலைகள் ‘மரணப் பொறிகளாக’ உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேலின் செயற்பாடு ‘பயங்கரமாக’ உள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க் சாடியுள்ளார். ‘போர் வழிமுறை மற்றும் போக்கு காசாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கு கொடூரமான துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

காசாவில் 19 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 55,362 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment