(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தி அடுத்து ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய பலம் மிக்க சக்தியாக உருவாக வேண்டும். அதற்கு கட்சிக்குள் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டவர்களுக்கு கட்சியில் மேலும் உயர்வடைவதற்கான வாய்ப்புக்களை தலைமைத்துவம் வழங்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் தலைமைத்துவம் அத்தியாவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்தி ஒற்றுமையுடன் முன்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. ஒற்றுமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக வேண்டும்.
அடுத்து ஆட்சியைக் கைப்பற்றக் கூடியவாறு கட்சியின் உள்ளக கட்டமைப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய, ஊழல் மோசடிகளற்ற சிறந்த தலைமைத்துவம் கட்சிக்குள் உருவாகியுள்ளது. ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹசீம், எரான் விக்கிரமரத்ன, முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், நளின் பண்டார போன்றவர்கள் தூய்மையான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டை கட்டியெழுப்பக்கூடிய உண்மையான திறமையும், பலமும் கொண்டவர்கள். இவர்கள் மேலும் உயரக்கூடியவர்கள். எனவே அவர்களுக்கான இடத்தை வழங்க வேண்டியது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கடமையாகும்.
ஐக்கிய தேசிய கட்சியின் பலவீனமான தலைமைத்துவத்தால்தான் இன்று நாடும் இந்த நிலையை அடைந்துள்ளது. நாம் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தோன்றியவர்கள். எனவே இனியும் ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சக்தி ஓரிருவருக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டவையாக இருக்கக்கூடாது. எனவே பலம்மிக்க சிறந்த இளம் தலைமைத்துவம் இனிவரும் அரசியலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தேவையாகவுள்ளது.
இனிவரும் காலங்களில் கட்சிக்கும், நாட்டுக்கும் தேவையான சிறந்த இளம் தலைமைத்துவத்தை முன்னிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்திக்குள் அந்த மாற்றம் நிச்சயம் ஏற்படுத்தப்பட வேண்டும். நாட்டு நலனுக்கு இந்த மாற்றம் அத்தியாவசியமானது என்றார்.
No comments:
Post a Comment