கனடாவில் வாழும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுரவின் நிர்வாகம் அமைந்துள்ளது - சஞ்ஜீவ எதிரிமான்ன - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 14, 2025

கனடாவில் வாழும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுரவின் நிர்வாகம் அமைந்துள்ளது - சஞ்ஜீவ எதிரிமான்ன

(இராஜதுரை ஹஷான்)

தமிழ் இனப் படுகொலையை ஏற்றுக் கொள்ளாத இலங்கையர்கள் கனடாவில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று பிரம்டன் நகர மேயர் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது. தமிழ் இனப் படுகொலை என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. கனடாவில் வாழும் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகம் அமைந்துள்ளது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கனடாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப் பூங்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில் நினைவுத்தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு, கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த அரசாங்கம் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.

2024.08.14ஆம் திகதியன்று கனடாவில் பிரம்டன் நகரில் பொதுப் பூங்காவில் இந்த நினைவுத் தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி இந்த செயற்பாட்டுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கடும் அதிருப்தியை கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வெளிப்படுத்தினார்.

அத்துடன் இலங்கையில் தமிழ் இன அழிப்பு படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் தேசிய நல்லிணக்க உறுதிப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் இலங்கை சார்பில் அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி முறைப்பாடு அளித்திருந்தார்.

நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உத்வேகமடைந்துள்ளார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கடனா சென்றிருந்தபோது புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளார்.

இந்த நினைவுத்தூபி திறப்பு விழாவில் கலந்துகொண்ட கனடாவின் பிரம்டன் நகர மேயர் பெற்றிக் ப்ரொய்லர் 'தமிழ் இனப் படுகொலையை ஏற்றுக் கொள்ளாத இலங்கையர்களை பிரம்டன் நகரம் அங்கீகரிக்காது, கனடாவும் அங்கீகரிக்காது. அவ்வாறானவர்கள் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கூற்று மிகவும் பாரதூரமானது. தமிழ் இனப் படுகொலை என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றார்.

No comments:

Post a Comment