(எம்.மனோசித்ரா)
தேயிலையின் மூலம் சுமார் 11 ஆண்டுகளின் பின்னர் அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது. இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையை அதிக வருமானம் ஈட்டும் துறையாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை 2.5 பில்லியன் டொலராக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
எட்டாவது தேசிய தேயிலை நிகழ்வு செவ்வாய்க்கிழமை (13) பதுளை முதியாங்கனை விகாரையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 11 ஆண்டுகளின் பின்னர் இவ்வாண்டின் முதல் காலாண்டில் தேயிலையின் மூலம் அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேயிலை மூலம் 355 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெற்றிருந்தது.
எவ்வாறிருப்பினும் சுமார் 11 ஆண்டுகளின் பின்னர் இவ்வாண்டின் முதல் காலாண்டில் அதனை 371 மில்லியன் டொலர் வரை அதிகரித்துக் கொள்ள முடிந்துள்ளது. இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையை அதிக வருமானம் ஈட்டும் துறையாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை 2.5 பில்லியன் டொலராக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
இதேவேளை இலங்கை தேயிலைத் தொழிற்துறைக்கு பங்களிப்பு வழங்கிவரும் அனைத்துப் பங்குதாரர்களின் பங்குப்பற்றலுடன் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
No comments:
Post a Comment