(எம்.மனோசித்ரா)
மத்துகம பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவைக்கோரி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எமக்கு 80 இலட்சம் ரூபாவை வழங்குவதாகக் கூறியது. அது மாத்திரமின்றி பல அரசியல் ரீதியான பதவிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டன. எனினும் தாம் அதற்கு இணங்கவில்லை என மத்துகம தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை குழு உறுப்பினர் கசுன் முனசிங்க தெரிவித்தார்.
களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தலின் பின்னர் ஆளுந்தரப்பினருடன் 4 சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அந்த பேச்சுவார்த்தைகளின்போது தொகுதிக்காக பணம் வழங்குவதற்கும், அரசியல் ரீதியில் பதவிகளை வழங்குவதற்கும் எம்மிடம் பேரம் பேசப்பட்டது. எவ்வாறிருப்பினும் பேச்சுவார்த்தையின் ஆரம்பம் முதல் இறுதி வரை மத்துகம பிரதேச சபை தலைவர் பதவியை மாத்திரமே நாம் கோரினோம்.
மத்துகம தொகுதியை அழகுபடுத்துவதற்கும், அபிவிருத்தி செய்வதற்குமான வேலைத்திட்டங்கள் எம்மிடமுள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காகவே நாம் தலைவர் பதவியைக் கோரினோம். எவ்வாறிருப்பினும் அரசாங்கம் எம்மிடம் பேரம் பேசியதே தவிர, எமது கோரிக்கைக்கு இணங்கவில்லை. எனவேதான் நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து எமது கோரிக்கைகளை முன்வைத்தோம்.
ஐக்கிய மக்கள் சக்தியால் எமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரொருவர் எனது வீட்டுக்கு வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அது தொடர்பான சி.சி.டி.வி. காணொளி என்னிடமிருக்கிறது. அதன் பின்னர் கொழும்பிலும் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. எமது தேவை பணம் அல்ல என்பதால் நாம் தேசிய மக்கள் சக்தி பரிந்துரைத்த சிறப்புரிமைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
தொகுதிக்கு 80 இலட்சம் வரை வழங்குவதாகக் கூறினர். இப்போதும் அதனை விட பாரிய தொகை தருவதாகக் கூறி அழைக்கின்றனர். நாம் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களாக செயற்படுவோம். இன்னும் 3 ஆசனங்களைப் பெற்றால் 50 சதவீதம் எமக்கு கிடைக்கும். அதனைப் பெறுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதற்கமைய மத்துகம பிரதேச சபையில் நாம் ஆட்சியமைப்போம் என்றார்.
No comments:
Post a Comment