காசாவில் தனது இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தி இருக்கும் இஸ்ரேல் நேற்றுக் காலை தொடக்கம் நடத்திய சரமாரி தாக்குதல்களில் கூடாரங்களில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட குறைந்தது 125 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே புதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல்களும் தீவிரம் அடைந்துள்ளன.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள அல் மவாசி பகுதியில் இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் வீசிய குண்டு மழையில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டு மேலும் 100 பேர் வரை காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதில் சிலர் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்த சடலங்களை காண்பிக்கும் உறுதி செய்யப்பட்ட வீடியோக்கள் அங்கிருந்து வெளியாகியுள்ளன. கொல்லப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் அருகில் இருக்கும் கள வைத்தியசாலை மற்றும் நாசர் மருத்துவ வளாகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபரில் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா அல் சின்வாரின் சகோதரர் சக்கரியா அல் சின்வார் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் மத்திய காசாவில் அவர்கள் தங்கி இருந்த கூடாரம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார். சின்வார் காசா பல்கலைக்கழகம் ஒன்றில் வரலாற்று பேராசிரியராக இருந்துள்ளார்.
இதில் கடுமையாக தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் வடக்கு காசா பகுதியில் நேற்று காலை தொடக்கம் 42 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் மூன்று ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.
இஸ்ரேலிய இராணுவம் தனது தரைவழி ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்தி வரும் நிலையில் கடந்த நான்கு நாட்களில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து 24 மணி நேரத்தில் 361 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 53,339 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 121,034 பேர் காயமடைந்துள்ளனர்.
கான் யூனிஸில் இடம்பெயர்ந்த மக்கள் மீதான தாக்குதல் சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் ‘கொடூரமான குற்றம்’ ஒன்றாகும் என்று ஹமாஸ் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்துவது குறித்து கண்டித்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், ‘இஸ்ரேல் தரைவழி நடவடிக்கையை விரிவுபடுத்துவது மற்றும் விடயங்கள் தொடர்பில் நான் அச்சம் அடைந்துள்ளேன்’ என்றார்.
போர் இலக்கை எட்டும் திட்டத்தின் ஓர் அங்கமாக காசா பகுதியில் தாக்குதல்களை விரிவுபடுத்தி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இந்த படை நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்போது ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள் காசாவுக்கும் நுழையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லை பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகளை காண முடிவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக காசாவில் படை நடவடிக்கையை விரிவுபடுத்துவது மற்றும் அந்தப் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த படை நடவடிக்கை குறித்து அதிர்ச்சியை வெளியிட்ட பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி, ‘குண்டுவீச்சுகள், பட்டினி அல்லது போதிய மருத்துவ பராமரிப்பு இல்லாததால் இன்னும் எத்தனை பலஸ்தீனர்கள் தமது சொந்த நிலத்தில் இருந்து ஓழிக்கப்படப்போகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான சுற்றிவளைப்புகள் காரணமாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இயங்கி வருகின்றன. காசாவுக்கு உதவிகள் செல்லாத வகையில் கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வரும் முற்றுகை அங்கு பரந்த அளவில் பட்டினி மற்றும் பஞ்ச அபாயத்தை உருவாக்கியுள்ளது.
நேற்று அதிகாலை தொடக்கம் வடக்கு காசாவில் உள்ள இந்தோனேசிய வைத்தியசாலையை இஸ்ரேலிய இராணுவம் முற்றுகை இட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது நோயாளிகள், காயமடைந்தவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இடையே அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆதரவுடன் எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மறைமுக போர் நிறுத்த பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமை ஆரம்பித்தது. எனினும் அதில் இதுவரை முன்னேற்றம் எட்டப்படவில்லை என்று பேச்சுவார்த்தையாளர்களுடன் நெருக்கமான தரப்புகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
‘குறிப்பிட்ட எண்ணிக்கையான பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஹமாஸ் அமைப்பு நெகிழ்வுப்போக்கை காண்பித்தபோதும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான இஸ்ரேலின் கடப்பாடு பற்றிய பிரச்சினை தொடர்ந்து நீடிக்கிறது’ என்று இந்த பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட பலஸ்தீன அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இரண்டு மாத போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு பகரமாக இஸ்ரேலிய பணயக்கைதிகளில் பாதி அளவானர்களை விடுவிப்பதற்கு பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் பரிந்துரைத்திருப்பதாக பிரிட்டன் செய்தி நிறுவனங்களான பி.பி.சி. மற்றும் ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இது தொடர்பில் ரோய்ட்டர்ஸுக்கு பதில் அளித்திருக்கும் ஹமாஸ் அதிகாரி ஒருவர், ‘இஸ்ரேலின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடப்பாடு ஒன்று இல்லாமல் தமது கைதிகளை விடுவிக்க அவர்கள் விரும்புகிறார்கள்’ என்றார்.
இதேவேளை யெமனில் இருந்து வீசப்பட்ட ஏவுகணை ஒன்றை இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று குறிப்பிட்டது. இதனால் இஸ்ரேலின் பல இடங்களிலும் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
டெல் அவிவுக்கு அருகில் இருந்து பென் கூரியன் விமானநிலையத்தை இலக்கு வைத்து இரு பலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனர்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி ஹூத்திக்கள் இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment