அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது : புறக்கணிக்கப்பட்டோர் அரசாங்கத்துக்கு எதிராக கூட்டணி - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2025

அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது : புறக்கணிக்கப்பட்டோர் அரசாங்கத்துக்கு எதிராக கூட்டணி - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

(இராஜதுரை ஹஷான்)

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக கூட்டணியமைக்க முயற்சிக்கிறார்கள். மக்களாணையை மலினப்படுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, வரவு செலவுத் திட்டத்தை தொடர்ந்து கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் சகல அமைச்சுக்கள் ஊடாக அமுல்படுத்தப்படும். சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் பணிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊழல் ஒழிப்பு என்பது கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகும். கடந்த கால ஊழல் மோசடிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது.

சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது ஊழல்வாதிகள் அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். எவரையும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. ஊழல்வாதிகளை மக்கள் அறிவார்கள். அவர்களின் ஊழல் மோசடிகளையும் அறிவார்கள்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகவும். கடந்த அரசாங்கங்களைப் போன்று சட்டத்தை தமது விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்தப் போவதில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து கூட்டணியமைக்க முயற்சிக்கிறார்கள். தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆணையை மலினப்படுத்த இடமளிக்கப் போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment