(எம்.மனோசித்ரா)
நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமானதாக கருதவில்லை. விசாரணைகளின் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க தகவல்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவிப்பார். இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் அரசாங்கம் உதாசீனப்படுத்தாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வியாழக்கிழமை (20) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமானதாக கருதவில்லை. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கிடையில் இடம்பெறும் மோதல்களில் இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன என்றே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இவ்வாறான எந்தவொரு சம்பவத்தையும் நாம் சாதாரணமானவையாகக் கருதவில்லை. இந்த சம்பவத்தின் பின்னணியிலுள்ள திட்டமிட்ட குற்றங்கள், பாதாள உலகக் குழுவினர், போதைப் பொருள் கடத்தல், கருப்பு பண பரிமாற்றம், அரசியல் தொடர்புகள் உள்ளிட்ட சகல காரணிகள் தொடர்பிலும் ஆழமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
இதன் காரணமாகவே சம்பவம் இடம்பெற்று 7 மணித்தியாலங்களுக்குள் பிரதான சந்தேகநபரை கைது செய்ய முடிந்தது. அத்தோடு, மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பிரிதொரு சந்தேகநபரான பெண்னொருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற இவ்வாறான கொலைகளுடன் தொடர்புடைய சகல சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை. சிலர் நாட்டில் தலைமறைவாக உள்ளதோடு, சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களில் இந்தியா மற்றும் துபாயிலிருந்து இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகள் நிறைவடையும் வரை இது தொடர்பில் எவ்வித தகவல்களையும் வெளியிட முடியாது.
9ஆம் இலக்க நீதிமன்றத் தொகுதியிலிருந்து 5ஆம் இலக்க நீதிமன்ற தொகுதிக்கு கொல்லப்பட்ட சந்தேகநபர் அழைத்துவரப்பட்டமை தொடர்பில் துப்பாக்கிதாரிக்கு எவரேனும் தகவல்களை வழங்கினார்களா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க தகவல்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாளை (இன்று) பாராளுமன்றத்தில் அறிவிப்பார். இதன்போதும் சகல தகவல்களையும் வெளிப்படுத்த முடியாது.
அதேவேளை இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் அரசாங்கம் உதாசீனப்படுத்தாது. மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவமும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் நீதி அமைச்சருக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment