எந்தவொரு முகவர் நிறுவனத்துக்கும் அனுமதி வழங்கவில்லை : வெளிநாட்டு கனவை சிதைத்துக் கொள்ள வேண்டாம் - இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 9, 2025

எந்தவொரு முகவர் நிறுவனத்துக்கும் அனுமதி வழங்கவில்லை : வெளிநாட்டு கனவை சிதைத்துக் கொள்ள வேண்டாம் - இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்

(எம். ஆர். எம். வசீம்)

E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதற்கான அனுமதியை எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வழங்கவில்லை. அதனால் மோசடிக்காரர்களிடம் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தன் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது நடைமுறையில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவில் தொழில் வழங்குவதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணம் வசூலிக்கும் மோசடி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் எந்தவொரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கோ, தனி நபர் அல்லது தனி நபர் குழுவிற்கோ E-8 தொழில் வாய்ப்புப் பிரிவின் கீழ் தொழில் அல்லது அது தொடர்பான பயிற்சியை வழங்குவதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை.

அதனால் , எந்தவொரு வேலை வாய்ப்பு நிறுவனமோ, தனி நபரோ அல்லது தனி நபர் குழுவோ அத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு எந்தவித சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை. மேலும் எந்தவொரு நிறுவனமோ அல்லது தனி நபரோ அத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் சட்டவிரோதமானது.

அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது அதனை ஆதரிக்கும் வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது முகவர் நிலையங்கள் அல்லாத வேலை வாய்ப்பு நிறுவனங்கள், தனி நபர்கள் அல்லது இடைத்தரகர்கள், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்களின் தரத்தைப் பொருட்படுத்தாமல் கைது செய்யப்படுவார்கள்.

அத்துடன் E-8 விசா பிரிவின் கீழ் செயல்பட எந்த தனியார் முகவர் நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

E-8 விசாவின் கீழ் தென் கொரியாவில் தொழிலுக்காக வெளிநாடு செல்ல விருப்பம் உள்ள எந்தவொரு இலங்கையருக்கும் இதுபோன்ற பணம் அல்லது வேறு ஏதேனும் செயல்முறைகளில் சிக்கினால், கொரியாவிற்கு அல்லது வேறு எந்த நாட்டிற்கும் தொழிலுக்காக வெளிநாடு செல்ல முடியாத அபாயம் இருப்பதால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அத்தகைய மோசடி நடவடிக்கைகளில் சிக்காமல் இருக்குமாறு அவர்களை கேட்டுக் கொள்கிறது.

எனவே, இலங்கை மக்கள் அனைவரும் இதுபோன்ற மோசடியாளர்களிடம் சிக்கிக் கொண்டு வெளிநாடு செல்லும் கனவை சிதைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment