(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சட்டபீடம் அமைப்பது பொருத்தமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் வலியுறுத்தினார்.
பல்கலைக்கழகத்தில் பீடம், திணைக்களம் மற்றும் கற்கை நெறியை ஆரம்பிப்பது குறித்து அமைச்சருக்கு தீர்மானம் எடுக்க முடியாது. குறித்த பல்கலைக்கழகம் அதற்கான யோசனையை முதலில் முன்வைக்க வேண்டும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிசீலனையின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான கேள்வி வேளையின்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர்,
மொறட்டுவ கொத்தலாவல பல்கலைகத்திலும் சட்டமாணி பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தை ஸ்தாபிப்பதாக குறிப்பிடப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சட்டபீடம் அமைப்பது பொருத்தமானதாக அமையும் என்று வலியுறுத்துகிறேன். கொத்தலாவல பல்கலைக்கழகம் குறித்து காணப்படும் பிரச்சினைகளை பிரதமர் அறிவாரா ? என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த பிரதமர், திறந்த பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாகவே கருதப்படும். பாரம்பரியமான முறையில் அல்லாது தொலைநோக்கு கல்வி முறைமையில் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. அரச பல்கலைக்கழகங்களில் சட்டக் கல்லூரிக்கு செல்லும்போது இறுதிப் பரீட்சைக்கு தோற்ற முடியும். இவ்வாறான முறையில்தான் திறந்த பல்கலைக்கழகம் செயற்படுகிறது.
கொத்தலாவல பல்கலைக்கழகம் கல்வி அமைச்சின் விடயதானத்துக்குள் உள்ளடங்காத அரச பல்கலைக்கழகமாகும். தரவு கட்டமைப்புக்கு அமையாகவே இந்த பல்கலைக்கழகம் செயற்படுகிறது. இருப்பினும் இந்த பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் உள்ளடங்காது. இது குறித்தும் ஆராய்ந்துள்ளோம். கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்படும்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சட்டபீடத்தை ஸ்தாபிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளீர்கள், அனைத்து பல்கலைக்கழகங்களையும் தேசிய மட்டத்தில் பார்க்கிறோம். பிரதேச மட்டத்தில் எந்த பல்கலைக்கழகங்களையும் கருதவில்லை.
தேசிய கொள்கைக்கு அமைவாகவே கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் பீடம், திணைக்களம் மற்றும் கற்கை நெறி ஆகியவற்றை புதிதாக ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சரால் தீர்மானிக்க முடியாது. கடந்த காலங்களில் எவ்வாறு இடம்பெற்றது என்பது எனக்கு தெரியாது. இனி அவ்வாறு இடம்பெறாது.
பல்கலைக்கழகங்களில் சுயாதீனம் மற்றும் சுதந்திரமான கல்வி செயற்பாடுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆகவே குறித்த பல்கலைக்கழகம் யோசனையை முன்வைக்க வேண்டும். அந்த யோசனையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிசீலனை செய்ய வேண்டும். ஆகவே அமைச்சரவையின் விருப்பத்துக்கு அமைய செயற்பட முடியாது. குறித்த பல்கலைக்கழகம் அதற்கான யோசனையை முதலில் முன்வைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment