முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 9 வாகனங்களை பயன்படுத்தியுள்ளதுடன் இந்த வாகனங்களுக்கு எரிபொருளுக்காக 33 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் போதும் கடந்த அரசாங்கம் செலவுகளை குறைத்துக் கொள்ளவில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்கள் பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல செலவு அறிக்கைகளை, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வியாழக்கிழமை (27) சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டு நவம்பர் வரை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 70 ஊழியர்கள் கடமை புரிந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 24 ஆம் திகதி வரை, முன்னாள் சபாநாயகர் 09 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார். அந்த 09 மாத காலத்தில் மாத்திரம் எரிபொருளுக்காக 3.34 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் பிரதி சபாநாயகர் 06 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதுடன் 09 மாதங்களுக்கு 135 இலட்சம் ரூபாவை எரிபொருளுக்காக செலவிட்டுள்ளார். முன்னாள் பிரதிக் குழுக்களின் தலைவர் 04 வாகனங்களைப் பயன்படுத்தியதுடன் 72 இலட்சம் ரூபாவை எரிபொருளுக்காக செலவிட்டுள்ளார் என்றும் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் ஆளும் தரப்பின் பிரதம கொறடா, சபை முதல்வர் அலுவலகம் ஆகியவற்றின் செலவுகளை இயலுமான வகையில் குறைத்துள்ளோம். அரச செலவுகளை குறைக்கும் செயற்பாடுகளை அரசாங்கத்துக்குள் இருந்தே முன்னெடுத்துள்ளோம் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment