(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கியிருக்கும் நிதியை 5 ஆயிரம் மில்லியனாக அதிகரித்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையை பூரணப்படுத்த வேண்டும். அதற்கான முறையான செயற்றிட்டத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் அரசாங்கம் முன்வைத்திருக்கும் வரவு செலவு திட்டம் மக்களை ஓரளவேனும் வாழ வைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவே காண்கிறோம்.
குறிப்பாக மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள பல மில்லியன் ரூபாக்களை ஒதுக்கி இருப்பதை காண்கிறோம்.
அதேபோன்று வடக்கு மாகாண பாடசாலைகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கு மாணவர்கள் மர நிலழில் கல்வி கற்று வந்த நிலையில், அப்போது இருந்த அரசாங்கங்கள் பாடசாலைகளை நிர்மாணித்து அந்த நிலைமையை மாற்றியமைத்தபோதும் இன்னும் சில பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் பூர்ணப்படுத்தப்படாமல் இருக்கின்றன.
வன்னி மாவட்டத்தில் மாத்திரம் அவ்வாறான 38 பாடசாலைகள் இருக்கின்றன. அவற்றில் 14 பாடசாலைகளுக்கு நாங்கள் நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தேர்தல் வந்ததால் அந்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டன. அந்த பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்து பூரணப்படுத்த வேண்டும்.
மேலும் யாழ் வளாகமாக இருந்த வவுனியா பல்கலைக்கழகம் தற்போது தரம் உயர்த்தப்பட்டு வவுனியா பல்கலைக்கழகமாக மாறி இருக்கிறது. இதில் மருத்து பீடத்தை ஆரம்பிக்க நாங்கள் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்துவந்தோம். என்றாலும் இந்த வரவு செலவு திட்டத்தில் அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியில் இது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோன்று வடக்கு மாகாணத்துக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பில் அரசாங்கத்துக்கு நன்றி செலுத்துகிறோம். அந்த நிதி ஒதுக்கீட்டில் கடந்த காலங்களில் இடை நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவடைந்தபோதும் இன்னும் அங்கு மீள் குடியேற்றம் முடிவடையவில்லை. சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் வரை இன்னும் மீள் குடியேற்றப்பட இருக்கின்றன.
கடந்த கால அரசாங்கங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும் சரியான பொறிமுறையை பின்பற்றாமல் செயற்பட்டதால் இந்த மீள் குடியேற்றம் என்பது பிச்சைக்காரனின் புண் போன்றே இருந்து வருகிறது.
அதனால் இந்த அரசாங்கம் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்றாலும் இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 1500 மில்லியன் ரூபா போதுமானதாக இல்லை. 5 ஆயிரம் மில்லியனாவது ஒதுக்க வேண்டும். இதற்கு முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment