காணாமலானோர் தொடர்பில் விசாரணைகள் நடத்துவதற்கு 2016 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவற்றுக்கு 5301 இலட்சம் ரூபா செலவிடப்பட்டிருந்தபோதும் அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை என, ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இடம்பெறும்போது உடனடியாகவே அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது வழக்கமாகியிருந்தது.
ஆணைக்குழு அமைக்கப்பட்டது ஒரு செய்தியாக பிரசாரப்படுத்தப்படும். ஆனால் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கைகள் எதுவும் வெளிவராது என்பதே உண்மை.
2016 ஆம் ஆண்டு முதல் 14 முக்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அரச நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக 662.34 இலட்சம் ரூபா செலவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இறுதியில் அந்த குழுவின் அறிக்கையும் வெளிவரவில்லை.
காணாமலானோர் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கும் 144.56 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை கிடைக்கவில்லை.அதுவும் காணாமலாக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவுக்கு 1063 இலட்சம் ரூபா, ஊழல் எதிர்ப்பு அலுவலகத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு 350 இலட்சம் ரூபா, அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை குழுவுக்கு 842 இலட்சம் ரூபா, சுங்கத் திணைக்களம் மீதான குற்றச்சாட்டை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவுக்கு 318 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் அரசாங்கத்தின் நிதி செலவிடப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக மொத்தம் 5301 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுக்கள் முறையாக அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. ஆனால் 2022 மே 09 சம்பவம் தொடர்பில் மாத்திரம் துரிதரமாக விசாரணை நடத்தப்பட்டு, துரிதமாக அறிக்கை சமர்ப்பித்து நட்டஈடும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கங்களை காட்டிலும் இயலுமான வகையில் அரச செலவுகளை குறைத்து கொண்டுள்ளோம். செலவு குறைப்புக்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் விடயதானத்தில் இருந்து முன்னெடுத்து நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட்டுள்ளோம் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment