43 பேரிடமும் நட்டயீட்டை மீளப் பெற வேண்டும் : அவர்கள் செய்தவைக்கு கிடைத்த பலன் - பிரதி அமைச்சர் நளின் ஹேவகே - News View

About Us

About Us

Breaking

Sunday, February 9, 2025

43 பேரிடமும் நட்டயீட்டை மீளப் பெற வேண்டும் : அவர்கள் செய்தவைக்கு கிடைத்த பலன் - பிரதி அமைச்சர் நளின் ஹேவகே

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் அசாதாரண நிலையின்போது வீடுகள் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாக தெரிவித்து 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்ட நட்டயீட்டை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது நாடு என்ற வகையில் செலுத்த வேண்டிய நட்டயீடு அல்ல. அது அவர்கள் செய்த விடயங்களுக்கு கிடைத்த பலனாகும் என தொழில், கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதி அமைச்சர் மேலும் கூறுகையில், அரசாங்கம் பொறுப்பேற்று 70 நாட்களே கடந்துள்ளன. இந்த அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளனர். அவர்களது ஊழல் மோசடி தொடர்பில் விடயங்கள் வெளிக்கொணரும்போது அரசாங்கத்துக்கு எதிராக சதி முயற்சிகளை மேற்கொள்கிறனர்.

எதிர்வரும் நாட்களில் சிலர் கைது செய்யப்படலாம். இதற்கு அச்சம் கொண்டுள்ள ஒரு தரப்பு எம்மை இலக்கு வைத்து சில விடயங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும் இந்த அரசாங்கம் தொடர்பில் மக்களிடத்தில் தெளிவு உள்ளது. மக்கள் பொறுமையுடனேயே இருக்கிறார்கள். எனவே எமக்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 கோடி ரூபா நட்டயீடு பெற்றுக் கொண்டமை தொடர்பிலும் இதன்போது பிரதி அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

இந்த நட்டயீடு அனைத்துக்கும் எதிர்காலத்தில் சரியாக வழக்கு தொடுத்து அதனை இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இது நாடு என்ற வகையில் செலுத்த வேண்டிய நட்டயீடு அல்ல. அது அவர்கள் செய்த விடயங்களுக்கு கிடைத்த பலனாகும். எனவே எதிர்காலத்தில் சரியாக வழக்கு தொடர்ந்து நட்டயீட்டை இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அவர்களிடமிருந்து அறவீட வேண்டும்.

கேள்வி - சேதங்களை எதிர்நோக்கியவர்களுக்கு நட்டயீடு வழங்கப்பட்டது. தீ வைத்தவர்களுக்கு வழக்கு தொடரவில்லையா?

பதில் - உண்மையில் அது தொடர்பில் ஆராய வேண்டும். ஆனால் இதன் முதலாவது குற்றவாளியாக அலரி மாளிக்கைக்கு மக்களை அழைத்து வந்து வன்முறைகளை தூண்டிய முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவர்களது மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுடன் தோளில் கைகளை போட்டுக்கொண்ட சனத் நிஷாந்த உள்ளிட்டவர்களே அதிக பொறுப்பை ஏற்க வேண்டும். மாலை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே எமது நிலைப்பாடு என்றார்.

No comments:

Post a Comment