(எம்.ஆர்.எம்.வசீம்)
இளைஞர் யுவதிகளை E8 விசாவில் கொரியாவில் தொழிலுக்கு அனுப்புவதற்கு செய்துகொண்ட ஒப்பந்தம் சட்டவிராேதமானது அல்ல. அமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்துக்கமையவே மேற்கொண்டோம். என்றாலும் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு அனுபவம் இல்லாமையால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
E8 விசா தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைச்சாத்திட்டடுள்ள ஒப்பந்தம் சட்டவிராேதமானது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எமது இளைஞர் யுவதிகளுக்கு கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்காக கொரிய பிராந்தியம் ஒன்றின் ஆணையாளருடன் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருந்தேன். அது சட்டவிராேதமானது என அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இணக்கப்பாட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள அமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமையவே அந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். அவ்வாறு இல்லாமல் அது இராஜதந்திர ரீதியிலான ஒப்பந்தம் அல்ல. மாறாக இணக்கப்பாடும் புரிந்துணர்வும் மாத்திரமாகும்.
அத்துடன் எமது நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நாங்கள் மிகவும் அவதானத்துடனே இவ்வாறான ஒப்பந்தங்களுக்கு சென்றாேம்.
அதேநேரம் கொரியாவுக்கு தொழிலுக்கு சென்றவர்கள் தற்போது அனாதரவற்றவர்களாகி இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.
அவ்வாறு எதுவும் இல்லை. ஆனால் கொரியாவுக்கு தொழிலுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளை அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாலே இளைஞர் யுவதிகள் அனாதரவற்று இருக்கின்றனர். அதேபோன்று இன்னும் ஆயிரக்ணகான இளைஞர் யுவதிகள் தொழிலுக்கு செல்வதற்கு இருந்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் இல்லாமலாக்கிக் கொண்டிருக்கிறது.
அத்துடன் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கு அனுப்பும்போது அது தொடர்பில் அனுபவத்துடன் செயற்ட வேண்டும். அனுபவம் இல்லாமல் செயற்பட்டதாலே இளைஞர் யுவதிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று இஸ்ரேலில் இலங்கைக்கு கிடைக்க இருந்த சுமார் ஆயிரம் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும்.
இதேவேளை, பொதுவாக நான் டிசம்பர் விடுமுறைக்கு வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம். என்றாலும் கடந்த இரண்டு வருடங்களாக நாட்டு நிலைமை காரணமாக செல்லவில்லை. நாட்டுக்கு டொலர் இல்லாத நிலையில் டொலர் கொண்டுவர நாங்கள் எமது உயிரை பணயம் வைத்து செயற்பட்டோம்.
என்றாலும் கடந்த மாதம் நான் வெளிநாட்டுக்கு சென்றிருந்ததை வைத்துக்கொண்டு பல்வேறு கதைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. நாங்கள் தவறு செய்தால்தான் பயப்பட வேண்டும். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அதனால்தான் தைரியமாக மக்கள் முன்வருகிறோம் என்றார்.
No comments:
Post a Comment