நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் இராணுவம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 19, 2025

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் இராணுவம்

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆலோசனைக்கமைய நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'தூய இலங்கை' தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அத்துடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்த ஏற்றதாக மாற்றவும், சிறிய பழுது பார்ப்புகளை மேற்கொள்ளவும் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளதுடன் தேசிய நலனுக்காக பாதுகாப்புப் படையினர் ஆதரவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் வழிகாட்டலின் கீழ் ஜனவரி மாதம் 18 முதல் 27 ஆம் திகதி வரை அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களாலும் நாடு முழுவதும் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய இதன் ஆரம்பமாக இராணுவத்தினர் பல பகுதிகளில் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment