நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை அநுரகுமார திசாநாயக்க மறந்துவிட்டார் : எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தால் வெளியேறத் தயார் - ஜனாதிபதிக்கு பதிலடி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை அநுரகுமார திசாநாயக்க மறந்துவிட்டார் : எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தால் வெளியேறத் தயார் - ஜனாதிபதிக்கு பதிலடி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன்,  ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக எழுத்து மூலம் வேண்டுகோளை விடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்யுமாறு அல்லது அதற்கு மாதந்தோறும் ரூபா 4.6 மில்லியன் வாடகை செலுத்துமாறு கேட்டு பொதுக்கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்தி இருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் டெய்லி மிரருக்கு பேட்டி அளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மிகவும் கொடூரமான காலங்களில் 10 ஆண்டுகள் நாட்டை வழிநடத்திய ஜனாதிபதியாகவும், முன்னாள் அரச தலைவராகவும், எனது பாதுகாப்பிற்காகவும் அரசியலமைப்பு ரீதியாக எனக்கு இந்த வீடு வழங்கப்பட்டது.

"நான் எப்போதும் தேசத்திற்காக உழைத்த ஓர் அரசியல்வாதி மற்றும் தலைவர். போரை முடிவுக்கு கொண்டுவருவது முதல் வளர்ச்சியைக் கொண்டுவருவது வரை, நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொண்டுவந்த வளர்ச்சியால் நாடு இன்று பயனடைகிறது. 

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எனது முயற்சிகளையும் நான் கையெழுத்திட்ட வளர்ச்சித் திட்டங்களையும் எனது வாரிசுகள் விமர்சித்தனர். சிலர் இந்தத் திட்டங்களை நிறுத்தவும் முயன்றனர், இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கடுமையாகப் பாதித்தது," என்று மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர்,  முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள் அரசமைப்பின் கீழ் எனக்கு அதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவதால் ஜனாதிபதிக்கு பலாபலன்கள் கிட்டும் என்றால் நான் அங்கிருந்து வெளியேறத் தயார் என குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, நான் பலவந்தமாக அந்த வீட்டை பிடித்து வைத்திருக்கவில்லை அங்கிருந்து வெளியேறத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்க்கட்சி அரசியல்வாதி போல நடந்து கொள்கின்றார் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை அநுரகுமார திசாநாயக்க மறந்து விட்டார்.

அவரது பேச்சுக்கள் அரசியல் மேடைகளுக்கும் தேர்தல் காலத்தில் அவர் போலி வாக்குறுதிகளை வழங்கியதை போல மக்களை தவறாக வழிநடத்துவதற்கும் உகந்தவை.

அநுரகுமார திசாநாயக்க எனக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தால் எனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறத் தயார் என்பதை நான் ஜனாதிபதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கு பதிலாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியல் மேடைகளில் மக்களை கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்களையும், பாதுகாப்பினையும் பறித்த பின்னர் அவர்களுக்கு எதிராக அநுரகுமார திசாநாயக்க கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார், தனது தோல்விகளை மறைப்பதற்காகவே அவர் இதனை செய்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

"அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எனது அரசு இல்லத்தை என்னிடமிருந்து பறிக்க வேண்டும் என்று நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். எதையும் வலுக்கட்டாயமாக வைத்திருக்கவில்லை. அவர் எனக்கு அதிகாரப்பூர்வ கோரிக்கையை அனுப்பட்டும்," என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment