அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை மிகவும் கவலைக்குரியது - திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, January 4, 2025

அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை மிகவும் கவலைக்குரியது - திஸ்ஸ அத்தநாயக்க

(எம்.மனோசித்ரா)

மக்களுக்கு விஷத்தை வழங்கியாவது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையா? சட்ட விரோத மதுபானத்துக்கு பதிலாக குறைந்த விலையில் மதுபானத்தை தயாரிக்கப் போவதாக அமைச்சரொருவர் தெரிவித்துள்ளமை எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாகுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வியெழுப்பினார்.

கண்டியில் சனிக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது. குறைந்த விலையில் மதுபானத்தை பெற்றுக் கொள்வதற்காக சீனியில் உற்பத்தி செய்யப்படும் எதனோல் மூலம் மதுபானத்தை தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகின்றார்.

சட்டவிரோத மதுபானங்களை ஒழிப்பதற்காக குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய மதுபானத்தை அரசாங்கமே தயாரிப்பதுதான் மாற்று வழியா? இதுவா அரசாங்கத்தின் கொள்கை?

மக்களின் அத்தியாவசிய தேவை இதுவல்ல. மக்களின் வருமான வழியை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கை செலவை குறைப்தே அரசாங்கத்தின் பிரதான கடமையாகும்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாகக்கூட சட்டவிரோத மதுபானம் உள்ளிட்டவற்றை அழிக்கலாம். அதனை விடுத்து குறைந்த விலையில் மதுபானத்தை தயாரிப்பது சமூகத்தில் பாரிய சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்றார்.

No comments:

Post a Comment