எம்மை வேறு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்குங்கள் - இளம்பிறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2025

எம்மை வேறு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்குங்கள் - இளம்பிறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்கி விடுங்கள் என நெடுந்தீவு இளம்பிறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் சமாச பிரதிநிதியுமான சத்தியாம்பிள்ளை தோமாஸ் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (3) யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு கடற்பரப்பில் பல வருட காலமாக இந்தியா அத்து மீறிய இழுவை படகுகளினால் எமது மீனவர்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த 29 ஆம் திகதியும் இந்தியா அத்துமீறிய இழுவைப் படகுகளினால், எமது 30 மீனவர்களின் சுமார் நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு இந்திய ரோலர்களினால் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

முன்னாள் கடற்தொழில் அமைச்சர் இந்தியா ரோலர்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் பேச்சுவர்த்தை நடத்தினார் தோல்வியில் முடிவடைந்தது. கச்சதீவில் இரு நாட்டு மீனவர்களையும் அழைத்து பேசினார் தோல்வியில் முடிவடைந்தது.

இவ்வாறு இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தால் நாம் என்ன செய்வது.

ஆகவே நெடுந்தீவில் இருந்து கொண்டு எமது வாழ்வாதார தொழிலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எம்மை வாழ்வதற்கு ஏற்ற ஒரு இடத்துக்கு மாற்றிவிட்டு இந்தியாவுக்கு நெடுந்தீவை ஒப்படையுங்கள் எங்களை வாழ விடுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment