நாட்டில் பல்கலைக்கழக கட்டமைப்பு விரிவுரையாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, வெற்றிடமாக உள்ள சில பதவிகளுக்கு தகுதியான நபர்களை நியமிக்க அதிகாரிகள் கடுமையாக போராடி வருவதாகவும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஊதியத்தில் விதிக்கப்பட்ட தனியாள் வரி போன்ற காரணங்களினால் 1,000 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
சில பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிக்க முடியவில்லை. நாங்கள் நேர்காணலை நடத்தும்போது தகுதியானவர்கள் வருவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்புக்கு வெளியே சிறந்த ஊதியம் வழங்கப்படுகிறது.
உதாரணமாக, சில மருத்துவ பீடங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. கடந்த அரசாங்கம் அதிக வரி விதித்ததால் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் இளம் விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
எனவே, வரி விதிப்பில் திருத்தம் செய்வது பல்கலைக்கழக கட்டமைப்புக்கு விரிவுரையாளர்களை ஈர்க்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும். நாட்டை விட்டு வெளியேறியவர்களும் அவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியவுடன் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
அவர்களை ஈர்ப்பதற்கான ஒரே வழி சம்பள உயர்வு அல்ல. வாழ்க்கைச் செலவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஊதிய அதிகரிப்பு நோக்கத்தை நிறைவேற்றாது. அதிக வரி விதிப்பு தகுதியுள்ளவர்கள் பல்கலைக்கழகங்களில் சேருவதையும் தடுக்கிறது. தற்போதைய நெருக்கடிக்கு பதிலளிப்பதில் நாம் ஒட்டு மொத்த அணுகுமுறையை உருவாக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
திறந்த பல்கலைக்கழகம் உட்பட 18 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) நிர்வகிக்கிறது.
உயர் கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, மொத்த தேவையில் 50 சதவீத அளவுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் சுமார் 10,000 பேர் உள்ளனர். இயற்கை அறிவியல் தொடர்பான பாடங்களுக்கு பெரும்பாலும் பற்றாக்குறை காணப்படுகிறது. தற்போது ஊழியர்களை நியமிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
No comments:
Post a Comment