(இராஜதுரை ஹஷான்)
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிப்பதை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதைப் போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள்தான் முதலில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என விவசாய ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பெரும்போக நெற் செய்கை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் ஒரு சில பிரதேசங்களில் ஈர நிலையிலான நெல்லை பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் 80 மற்றும் 85 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளார்கள்.
நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 முதல் 150 ரூபாவாக நிர்ணயிக்குமாறு விவசாயிகள் விவசாயத்துறை அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளபோதும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
பிரதான அரிசி உற்பத்தியாளர்களின் நியாயமற்ற விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தாமல் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ள நிலையில் 'நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயத்தை அரசாங்கம் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக' விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அத்துடன் விவசாயிகள் வெற்றிலை போடும் செலவையும் நெல்லுக்கான உத்தரவாத விலையில் சேர்த்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் வெற்றிலை போடுவது அரசாங்கத்துக்கு தேவையற்றதொரு விடயமாகும்.
தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதைப்போன்று நெல்லுக்கான சிறந்த விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்க நினைக்க வேண்டாம். அவ்வாறு நினைத்தால் கோட்டபய ராஜபக்ஷவுக்கும், அவரது அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட கதியே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள்தான் முதலாவதாக ஆரம்பித்தார்கள். இறுதியில் அந்த போராட்டம் மக்கள் போராட்டமாக உருவெடுத்தது. ஆகவே விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்கினால் இந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் விவசாயிகள் முதலில் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றார்.
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படாத நிலையில் கந்தளை, அம்பாறை மற்றும் நொச்சியாகம ஆகிய பிரதேசங்களில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒரு சில பகுதிகளில் ஈர பதத்திலான நாடு வகை நெல் 108 முதல் 110 ரூபாவுக்கும், உலர்ந்த நெல் 130 முதல் 135 ரூபாவுக்கும், ஈர பதத்திலான கீரி சம்பா நெல் 115 ரூபாவுக்கும், உலர்ந்த கீரி சம்பா நெல் 115 ரூபாவுக்கும் பிரதான அரிசி உற்பத்தியாளர்களினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment