இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும் : வடக்கு மாகாணத்தில் என்ன வளம் இல்லை? - ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 13, 2025

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும் : வடக்கு மாகாணத்தில் என்ன வளம் இல்லை? - ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான சந்தை விலை கிடைக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் பொருளாதார மத்திய நிலையங்களை இந்த ஆண்டு மீளத் திறப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மறவன்புலோ கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் நெல் அறுவடை விழாவும் கமக்காரர் கௌரவிப்பு நிகழ்வும் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் திங்கட்கிழமை காலை (13) இடம்பெற்றது.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், தற்போதைய காலநிலை மாற்றம் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றது. முன்னைய காலங்களில் நெல் அறுவடையின்போது மழை பெய்வதில்லை. ஆனால் இப்போது மழையின் பாதிப்பை நாம் எதிர்கொண்டிருக்கின்றோம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சில நாட்களுக்குள் கடும் மழை பெய்தபோதும் தெய்வாதீனமாக மிகப் பெரியளவு நெல் அழிவு ஏற்படவில்லை. அந்த மழை மற்றும் இப்போதும் பெய்யும் மழை என்பனவற்றால் உங்களின் வயல் நிலங்கள் ஈரலிப்பாக உள்ளன. எனவே இதை விவசாயிகள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நெல் அறுவடை முடிந்த பின்னர் சிறுதானியங்களை பயிரிடுங்கள். அதற்கான விதைகளை வழங்குவதற்கு விவசாயத் திணைக்களம், பிரதம செயலர் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களும் குளத்தை நம்பி இருபோகத்தை மேற்கொள்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நெற் செய்கை என்பது வான் பார்த்த பயிராகவே உள்ளது. மழையை நம்பி ஒருபோகம் மாத்திரமே செய்கின்றோம். எனவே தற்போதுள்ள காலநிலையின் மாற்றத்தைப் பயன்படுத்தி சிறுதானியப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
எமது மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், எந்தப் பயிரை உற்பத்தி செய்தால் ஏற்றுமதி செய்யலாம் என்பதையும் ஆராய்ந்து அதற்கு ஏற்ப விவசாய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும். அதற்கு விவசாயத் திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்றையதினம் நெல் அறுவடையுடன் சேர்த்து மூத்த விவசாயிகளை கௌரவித்திருந்தீர்கள். அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இன்று இளையோர் விவசாயத்தில் நாட்டம் குறைந்தவர்களாக மாறிவிட்டார்கள். வெளிநாட்டு மோகத்தில் அவர்கள் சிக்கியிருக்கின்றார்கள். அங்கு சென்ற பலர் இப்போது நாட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கள் இளையோர்கள் விவசாயத்தில் இறங்கினால் நாம் உற்பத்தியில் சிறப்பான இடத்தைப் பெற முடியும்.

வடக்கு மாகாணத்தில் என்ன வளம் இல்லை? இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்திலுள்ளது போன்று வளங்கள் ஏனைய மாகாணங்களில் இல்லை. ஆனால் அதை உரிய வகையில் நாங்கள் பயன்படுத்தத் தவறியிருக்கின்றோம்.
விவசாயமும், கடற்றொழிலும் எமது மாகாணத்தின் முக்கியமான பொருளாதாத் தூண்கள். அவை இரண்டையும் சார்ந்த தொழிற்சாலைகள் எமது பிரதேசத்தில் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாகவும் மாற்றியமைக்க முடியும் என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன், கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக கைதடி பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.கபில்ராஜூம் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்கள், ஊரவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment