கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவில், மேலதிக வகுப்புக்காக சென்றுகொண்டிருந்தபோது கடத்தப்பட்ட பாடசாலை மாணவி ஆபத்தின்றி பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையில், கடத்தலின் பிரதான சந்தேக நபரையும் அவரது நண்பர் மற்றும் வேன் சாரதியையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேன் சாரதி நேற்றுமுன்தினம் (14) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதுடன் தடுப்புக் காவலின் கீழ் விசாரிக்கப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் நேற்று (15) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே கம்பளை நீதிவான் காஞ்சனா கொடித்துவக்கு இவர்களை 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கடத்தலின்போது வேனின் சாரதியாக செயற்பட்ட கம்பளை, கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் அன்வர் சதாம், பிரதான சந்தேகநபரான மொஹம்மட் நாசிர், அவரது நண்பர் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த கடத்தலோடு தொடர்புபட்ட அனைவரையும் கைது செய்துள்ளதாக தவுலகல பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத் ரணசிங்க குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவி ஒருவரை கறுப்பு நிற வேனில் வந்த சிலர் கடந்த 12 ஆம் திகதி பலாத்காரமாக கடத்திச் சென்ற விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி, கடத்தலின் பிரதான சந்தேகநபர், மாணவியின் உறவினர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் கடத்தப்பட்ட தினம் மாலை முதல் மாணவியின் தந்தைக்கு தொலைபேசி அழைப்புக்களை எடுத்திருந்ததாக பொலிஸார் கூறினர்.
அத்துடன் மாணவியும் தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசி தன்னை காப்பாற்றுமாறு கோரியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த நிலையில் ஏற்கனவே, 12 ஆம் திகதி முதலில் கைது செய்யப்பட்ட வேனின் சாரதியிடம் தடுப்புக் காவல் விசாரணையின்போது பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்கள் மற்றும், தொலைபேசி கோபுரத் தகவல்கள், சந்தேகநபர் பயன்படுத்திய தொலைபேசியின் EMI இலக்கத்தை மையப்படுத்திய விசாரணைகளில், பிரதான சந்தேகநபர், அம்பாறை பகுதியில் தங்கியிருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
இந்நிலையிலேயே அம்பாறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இது குறித்த தகவல்கள் பரிமாற்றப்பட்ட நிலையில், அந்த தகவல்களை மையப்படுத்தி, 13 ஆம் திகதி காலை, அம்பாறை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து மாணவியை மீட்டு, பிரதான சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
இதனையடுத்து நேற்றுமுன்தினம் கடத்தலுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபரின் நண்பரை கம்பளை, ஜயமாபுர பகுதியில் வைத்து தவுலகல பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணைகளின்போது, கடத்தலின் பின்னர் பிரதான சந்தேகநபரின் நண்பரும், சாரதியும் பொலன்னருவை வரை உடன் சென்றுள்ளமையும் அங்கிருந்து இருவரும் கம்பளைக்கு திரும்பியுள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தேகநபர்கள் மீது கடத்தல், கப்பம் கோரல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் இடம்பெறுவதுடன் வாக்கு மூலங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடப்பதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
Vidivelli
No comments:
Post a Comment