பல்வேறு துறைகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2025

பல்வேறு துறைகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர்

“வளமான நாடு - அழகான வாழ்க்கையை” உருவாக்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” கருத்திட்டம்” தொடர்பில் இன்று (22) பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் நாட்டின் பல்வேறு துறைகளில் மக்கள் எதிர்நோக்கி வரும் பல பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தினதும், அரசாங்கத்தினதும் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளார்.

இங்கு பல்வேறு துறைகளில் நிலவும் பிரச்சினைகளை பற்றி சஜித் பிரேமதாஸ கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

அவையாவன

01. அரசாங்கம் உறுதியளித்தபடி மின்சாரக் கட்டணத்தை 1/3 குறைத்தல்.

02. நாட்டில் பெருகிவரும் குற்றச் செயல்களை கட்டுப்பாட்டுத்தி மக்களின் உயிர்களைப் பாதுகாத்தல்.

03. இன்னும் தீர்க்கப்படாத கடவுச்சீட்டுப் பிரச்சினை.

04. தேங்காய் எண்ணெய் இறக்குமதிப் பிரச்சினை.

05. துறைமுகத்தில் நிலவிவரும் கொள்கலன் நெரிசல் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.

06. சபாரி ஜீப் நடத்துநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.

07. வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.

08. சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பிற்கு வழங்கப்படும் 15% வட்டியை மீள வழங்கல்.

09. கல்வியற் கல்லூரி மற்றும் தாதி பயிலுநர் பயிற்சியில் உள்ள சிக்கல்கள்.

10. கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள்.

என மேற்கூறிய இப்பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை அரசாங்கத்திடமிருந்து தாம் எதிர்பார்ப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அவர் தெரிவித்த விடயங்களின் விரிவான தொகுப்பு (ஊடகப் பிரிவு)

01. வாக்குறுதியளித்த மின் கட்டணத்த 33% ஆல் குறையுங்கள்

மின்சாரக் கட்டணத்தை 1/3 குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்தார். 

6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபையும் கூறியது. பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பொது பயன்பாட்டு ஆணைக்குழு 20% ஆல் மின்சார கட்டணத்தை குறைத்தது. இதற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் தேவை என்கின்றனர். 

எனவே தற்போது இதனை 20% ஆல் குறைப்பதோடு, தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை 33% குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

02. மக்களின் வாழும் உரிமையை பாதுக்க வேண்டும்.

கொலைகள் மற்றும் போதைப் பொருள் பாவனை, கடத்தல் அதிகரித்துள்ளன. தரவுகளின் அடிப்படையில் 2024 இல் 121 துப்பாக்கிச் சூடுகளும் 60 கொலைகளும் நடந்துள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி, இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அரசின் பொறுப்பாகும்.

03. கடவுச்சீட்டுப் பிரச்சினையை தீர்க்கவும்.

கடவுச்சீட்டுப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதற்கு நிகழ்நிலை முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், நிகழ்நிலை முறையிலான விண்ணப்பங்களுக்கும் வரிசைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு விரைவான தீர்வுகள் அவசியம்.

04. தேங்காய் எண்ணெய் இறக்குமதி பிரச்சினைக்குத் தீர்வு தேவை.

தேங்காய் எண்ணெய் இறக்குமதி விடயத்தில் 2024 ஜனவரி முதல் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டன. சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யும் போது 18% பெறுமதி சேர் வரியும் 2.5% சமூக பாதுகாப்பு வரியும் விதிக்கப்பட்டாலும், இவ்வாறு சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்து பின்னர் சுத்திகரித்து சந்தைப்படுத்துவதில் அரசுக்குச் சேர வேண்டிய வரிகள் கிடைக்கவில்லை. இது 5 பில்லியனாக ரூபாவாக காணப்படுகின்றன. இது தொடர்பில் தீர்வு காணப்பட வேண்டும்.

05. துறைமுகத்தில் நிலவிவரும் கொள்கலன் நெரிசல் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.

துறைமுகத்தில் கொள்கலன் அகற்றும் பணி துரிதமாக இடம்பெறாமையினால், கொள்கலன் தாங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏராளமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை விட்டு வெளியேறியுள்ளன. இன்னும் 4,000 கொள்கலன்கள் இங்கு காணப்படுகின்றன. இதற்கு அரசாங்கம் அவசர தீர்வுகளை காண வேண்டும்.

06. சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பிற்கு வழங்கப்படும் 15% வட்டியை மீள வழங்கல்.

சிரேஷ்ட பிரஜைகள் தமது சேமிப்பிற்கு பல்வேறு அரசாங்கங்களின் கீழ் 15% வட்டியை பெற்று வந்தனர். ஆனால் 2022 முதல் அதை அது குறைக்கப்பட்டு தற்போது 7-8% வட்டி விகிதத்தை பெற்று வருகின்றனர். இந்த 15% வட்டி விகிதம் திரும்ப வழங்கப்பட வேண்டும்.

07. சபாரி ஜீப் நடத்துநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுங்கள்.

பஸ் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீது சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், சுற்றுலாத் துறை மற்றும் தேசிய பூங்காக்களில் சபாரி ஜீப் வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் ஏராளமானோர் வருமானம் பெறுகின்றனர். எனவே, இந்த ஜீப் வண்டிகள் விடயத்தில் உரியவாறு நடந்து கொள்ளுங்கள். முச்சக்கர வண்டிகள் மற்றும் பஸ்களின் தேவையற்ற உதிரிப் பாகங்கள் அகற்றப்பட்ட போதிலும் அதே சட்டம் இந்த ஜீப் வண்டிகள் மீதும் பிரயோகிக்கப்படக் கூடாது. இது சுற்றுலாத்துறைக்கு தேவையான ஒரு வண்டியாகும்.

08. வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்குங்கள்.

ஏறக்குறைய 45000 பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுங்கள். ஆளும் தரப்பின் தேர்தல் வாக்குறுதிகளில் இது ஒரு முக்கிய முன்மொழிவாக இருந்ததால் இந்த பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுங்கள். 22000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய இத்தரப்பினர்கள் பெரும் தியாகங்களைச் செய்தனர். இவர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுங்கள். இத்தரப்பினர்கள் கடந்த காலங்களில் தமது போராட்டத்தின் போது கூட பிரச்சினைகளை எதிர்கொண்டதால், இந்த விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்துங்கள்.

09. கல்வியற் கல்லூரி மற்றும் தாதி பயிலுநர் பயிற்சியில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள்.

கல்வித் துறையில் 706 வெற்றிடங்களை நிரப்ப வர்த்தமானி வெளியிடப்பட்டு பரீட்சைகள் நடைபெற்றன. அவர்கள் இன்னும் ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், முடிவுகளை விரைவில் வெளியிட்டு, உரிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவும். மேலும் கல்வியற் கல்லூரி மற்றும் தாதி பயிலுநர் பயிற்சியில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள். அடுத்த ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுங்கள். கல்வியற் கல்லூரிகள் ஊடாக பட்டம் வழங்கும் திட்டத்தை முன்னெடுங்கள்.

10. கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணுங்கள்.

கிராம உத்தியோகத்தர்களின் சேவை பிரமாணக் குறிப்பு, கொடுப்பனவுச் பிரச்சினை, அஸ்வெசும நிவாரணத் திட்டப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிராமத்தில் பெரும் பணிகளைச் செய்யும் கிராம உத்தியோகத்தர்களின் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.

மக்கள் எதிர்நோக்கும் மேற்கூறிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன, இந்த பாரதூரமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே முற்போக்கான தீர்வுகளை வழங்குங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ கருத்திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று மு.ப. 11.30 மணியிலிருந்து பி.ப. 5.30 மணி வரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ: https://fb.watch/xgngfjY-fE/

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை

அரசாங்கத்தின் கொள்கையாக “A rich country, a beautiful life” என்பதை உருவாக்கும் பயணத்தில், இந்த விவாதத்தில் பல்வேறு துறைகளின் குறைபாடுகளை முன்வைக்க நான் எண்ணுகிறேன்.

முதலில், கொலைகள், சட்டவிரோத மதுபான கடத்தல் போன்ற செயல்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும் 101 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், 60 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. சட்டம் ஒழுங்கு துறையில் அரசாங்கம் கவனம் செலுத்தி இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது முக்கியம் என்று நான் இந்த சந்தர்ப்பத்தில் முன்மொழிகிறேன்.

அதேபோல், கடவுச்சீட்டு பிரச்சினை மற்றொரு கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. நீண்ட காலமாக கடவுச்சீட்டு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்கு தீர்வு காண அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. ஆன்லைன் முறை மூலம் இந்த பிரச்சினைக்கு முறையான தீர்வு கிடைக்கவில்லை. கண்ணுக்குத் தெரியும் நீண்ட வரிசைக்கு பதிலாக இப்போது டிஜிட்டல் முறையில் பெரிய வரிசை உருவாகியுள்ளது. கடவுச்சீட்டு பெறுவதற்கு நீண்ட காலம் எடுக்கிறது என்ற குறைக்கு அரசாங்கம் தீர்வு காண்பது முக்கியம்.

அதேபோல், தேங்காய் எண்ணெய் இறக்குமதி துறையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரித்து வெளியிடும்போது 18% வட் வரி மற்றும் 2.5% சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை சுத்திகரித்து சந்தைக்கு வெளியிடுவதற்கான வரிகள் நாட்டிற்கும், மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இழப்பாக உள்ளது. சுமார் 5 பில்லியன் ரூபாய் நஷ்டம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கும் அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று நான் கோருகிறேன்.

அதேபோல், துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் மற்றும் ட்ரக் வண்டிகளின் நெரிசல் காரணமாக இப்போது பல கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை தவிர்த்துச் செல்கின்றன. இன்னும் சுமார் 4000 கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் கொழும்பு துறைமுகத்தில் குவிந்துள்ளன. துறைமுக நெரிசலுக்கு விரைவான தீர்வு காண்பது முக்கியம்.

அதேபோல், முதியோர் சமூகம் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் தங்கள் சேமிப்புகளுக்கு 15% வட்டி விகிதத்தின் பலனை அனுபவித்தது. கட்சி பேதமின்றி உருவான பல அரசாங்கங்கள் அதை செயல்படுத்தின. ஆனால் 2022 முதல் அந்த நன்மைகளை முதியோர் சமூகம் இழந்துள்ளது. தற்போது வழங்கப்படும் வட்டி விகிதம் அவர்களின் சேமிப்பு கணக்குகளில் 7-8 சதவீதமாக குறைந்துள்ளது. இத்தகைய சூழலில் ஒரு பக்கம் பிடித்து வைத்தல் வரி 5% இலிருந்து 10% வரை உயர்த்தப்பட்டுள்ளது அரசு கொள்கையாக உள்ளதால், முதியோர் சமூகத்தின் சேமிப்புகளுக்கு நியாயமான வட்டி விகிதம் வழங்குவது பொருத்தமானது. இதற்கு தெளிவான தீர்வு வழங்க வேண்டும் என நான் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், சுற்றுலாத் துறையில் தேசிய பூங்காக்களை மையமாகக் கொண்ட ஜீப் வாகன சுற்றுலா பிரிவு மிகவும் பிரபலமாகியுள்ளது. பெரும் எண்ணிக்கையிலானோர் இந்த வாழ்வாதாரத்தின் மூலம் நல்ல வருமானம் பெறுகின்றனர். சுற்றுலாத் துறை நாளுக்கு நாள் வளர்ச்சியடைகிறது. அது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காக்களுக்குச் செல்லும்போது, அவர்கள் பயன்படுத்தும் ஜீப் வாகனங்கள், பேருந்துகள் மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கு மற்ற வாகனங்களுக்கு நடந்தது போலவே நடக்கும் என்ற சந்தேகம் சுற்றுலா ஜீப் ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அவர்களின் ஜீப் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்கள் அகற்றப்பட்டால், சுற்றுலாத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படலாம். இது குறித்தும் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் 2015-2019 காலகட்டத்தில் இந்த சுற்றுலா ஜீப் வாகனங்களின் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டபோது, நாங்கள் முன்வந்து அந்த தடையை நிறுத்த நடவடிக்கை எடுத்தோம். அத்தகைய பாதிப்பு சுற்றுலா ஜீப் வாகனங்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், 35,000 முதல் 40,000 வரையிலான வேலையற்ற பட்டதாரிகள் நாட்டில் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டமாக இருந்தது. வேலையற்ற அந்த பட்டதாரிகளின் குறைகளுக்கு செவிசாய்த்து அதற்கும் தீர்வு காண்பது முக்கியம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

சுமார் 22,000 அபிவிருத்தி அலுவலர்கள் நமது நாட்டின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றினர். அவர்களை ஆசிரியர் சேவையில் சேர்த்துக் கொள்வதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அந்த வாய்ப்பு அவர்களுக்கு இழக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி அலுவலர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இம்முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். அபிவிருத்தி அலுவலர்கள் ஆசிரியர் சேவையில் சேர்வதற்கான கோரிக்கையை செயல்படுத்த அரசாங்கத்தின் தலையீட்டை நாம் எதிர்பார்க்கிறோம். ஆர்ப்பாட்டம் செய்யச் சென்று பல கடுமையான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. அப்போது பலர் பல்வேறு வன்முறைகளுக்கு உள்ளாயினர். பெரும் பணியாற்றிய அந்த அபிவிருத்தி அலுவலர்களுக்காக அந்தக் கடமையை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவையில் 706 வெற்றிடங்களை நிரப்புவதற்கான வர்த்தமானி அறிவிப்பு 2020இல் வெளியிடப்பட்டது. அந்தப் போட்டிப் பரீட்சை முடிவுகள் 2023.06.20 அன்று வெளியிடப்பட்டன. ஆனால் அந்த ஆட்சேர்ப்பு நடைமுறை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக முடிவுகள் வெளியிடப்பட்டு ஆசிரியர் கல்வியாளர் சேவைக்கான ஆட்சேர்ப்பை விரைவாக மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர் தாதியர் பயிற்சிக்கு கடைசியாக 2023ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது. இதுவரை 2021, 2022, 2023 உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான மாணவர் தாதியர் பயிற்சி வர்த்தமானி வெளியிடப்படவில்லை. அது குறித்தும் கவனம் செலுத்தி விரைவான தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

குளியாப்பிட்டி கல்வியியல் கல்லூரியில் மட்டும் தொழில்நுட்ப விஞ்ஞானம் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்ப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் மற்ற கல்வியியல் கல்லூரிகளிலும் தகுதிகளின் அடிப்படையில் பட்டம் வழங்கும் திட்டத்திற்கு செல்லுமாறு நாம் முன்மொழிகிறோம். அந்த கோரிக்கையையும் நிறைவேற்றித் தருமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக கிராம அலுவலர் துறையில் பணிபுரிபவர்களின் கொடுப்பனவு பிரச்சினை, சேவைப் பிரமாணக்குறிப்பு பிரச்சினை, அஸ்வெசும திட்டம் தொடர்பான பிரச்சினை, மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து கிராம அலுவலர்கள் விலகல் போன்ற பல பிரச்சினைகள் கிராம அலுவலர்களுக்கு ஏற்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்தும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கு குறைப்பதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக உயர்த்த வேண்டி வரும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். அந்த நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த யோசனை என்னவென்றால் ஆறு மாதங்களுக்கு மின்சார கட்டணத்தை குறைக்க முடியாது என்பதாகும். ஆனால் மின்சார சபை பெற்ற அதிக இலாபத்தின் முன்னிலையில் மக்கள் சார்பாக ஏற்பட்ட அழுத்தத்தால் பொது பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டியதாயிற்று. மின்சார கட்டணம் குறைக்கப்பட்ட சமயத்திலும் மின்சார சபை தெரிவித்தது என்னவென்றால் அது தொடர்பான இறுதி முடிவை நிதி அமைச்சு எடுக்க வேண்டும் என்பதாகும். மின்சார கட்டணத்தை குறைப்பது தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி. அந்த தேர்தல் வாக்குறுதியை அப்படியே நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. அதன்படி கூறியவாறு 33 சதவீத மின்சார கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விவாதத்தில் நான் நேரத்தை பயன்படுத்தியது சமூகத்தின் பல்வேறு துறைகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைப்பதற்காகும். புதிய கலாச்சாரம் மற்றும் புதிய வேலைத்திட்டம் பற்றி பேசும்போது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது நம் அனைவரினதும் பொறுப்பாகிறது. குறிப்பாக அரசுத்தரப்பு அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக முற்போக்காகவும் நேர்மறையாகவும், சாராம்சமாகவும், நாட்டுக்கு மதிப்பு கூட்டும் வகையில் நாட்டுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு செயலுக்கும் நாங்கள் ஆதரவு வழங்குகிறோம். அதேபோல் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் “A rich country, a beautiful life” உருவாக்கம் பாதிக்கப்படுகிறது.

நன்றி.

No comments:

Post a Comment