(செ.சுபதர்ஷனி)
நாடளாவிய ரீதியில் இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 44 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் சுமார் 3,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு சனிக்கிழமை 25ஆம் திகதி மாத்திரம் 129 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நிலவிவந்த மழையுடன் கூடிய வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.
அதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக் கூடிய டெங்கு நோயாளர்களின் வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளது.
டெங்கு பரவலைக் கருத்திற் கொண்டு 19 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2 ஆக உயர்வடைந்துள்ளது. எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன.
அத்தோடு கம்பஹா (614), கொழும்பு (537), கொழும்பு மாநகர சபை (506), காலி (257), கண்டி (242), மட்டக்களப்பு (234), இரத்தினபுரி (219), யாழ்ப்பாணம் (182) மற்றும் மாத்தறை (139) ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளது.
ஆகையால் பொதுமக்கள் டெங்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment