தமிழர் தாயகத்தில் மாணவர்களின் கல்வியில் மீள் எழுச்சி தேவை; அதற்காக உதவுவதற்குத் தயார் என்கிறார் ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Sunday, December 29, 2024

தமிழர் தாயகத்தில் மாணவர்களின் கல்வியில் மீள் எழுச்சி தேவை; அதற்காக உதவுவதற்குத் தயார் என்கிறார் ரவிகரன் எம்.பி

வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் கடந்த காலங்களில் எழுச்சி பெற்றிருந்த மாணவர்களின் கல்வி, தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள கல்வியில் மீள் எழுச்சி தேவையெனவும், அதற்காக உதவுவற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - பத்தாம் குறிச்சி, அறிவொளிமையம் கல்வி நிலையத்தில், கல்வி பயிலும் மாணவர்கள் தமது கல்விச் சுற்றுலாவின்போது, முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த மாணவர்கள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்கு சென்றதுடன், கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் மாணவர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வித்தரம் முன்னிலையில் இருந்தது.

ஆனால் தற்போது வடக்கு, கிழக்கில் எமது மாணவர்களின் கல்வித்தரம் குறைவடைந்து செல்கின்ற நிலைகளைக் காண்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும்.

எனவே அனைவரும் கல்வி கற்க வேண்டும், சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டும், உயர்ந்த நிலைகளைப் பெற வேண்டும் என்பதே மாணவர்கள் அனைவரதும் ஒரே இலக்காக இருக்க வேண்டும்.

எமது மாணவர்கள் கல்வியில் பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்ற நிலைகளைக் கடந்து தேசிய ரீதியிலும் வெற்றி பெற வேண்டும்.

மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்காக உதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், புலம்பெயர் உறவுகள் என அனைவரும் தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறிருக்கும்போது வடக்கு, கிழக்கு மாணவர்கள் தேசிய ரீதியில் முதல்நிலை பெற்றார்கள் என்ற நிலையை ஏன் ஏற்படுத்த முடியாது. அது மாணவர்களான உங்களின் கைகளிலேயே இருக்கின்றது.

அதேவேளை கல்வியில் சிறந்து விளங்குவதைப்போல, ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். வடக்கு, கிழக்குத் தமிழ் பிள்ளைகள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள் என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு எமது மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கும்போது எமது அடுத்தடுத்த சந்ததியினர் சிறந்து விளங்குவார்கள் என்றார்.

No comments:

Post a Comment