மக்களாணையை ஒருபோதும் பலவீனப்படுத்தப் போவதில்லை - பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல - News View

About Us

About Us

Breaking

Sunday, December 29, 2024

மக்களாணையை ஒருபோதும் பலவீனப்படுத்தப் போவதில்லை - பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதற்கு ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகின்றனர். கிடைக்கப் பெற்றுள்ள மக்களாணையை ஒருபோதும் பலவீனப்படுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களுக்கான அடிப்படை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரச செலவுகளை குறைத்து ஒட்டு மொத்த மக்களுக்கும் ஜனாதிபதி சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசியல் தரப்பில் மாறுபட்ட கருத்தை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக பாதுகாப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயத்தில் எவ்வித அரசியல் பழிவாங்களும் கிடையாது. அரச செலவுகளை குறைப்பதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளோம். ஆகவே அதற்கமைவாக செயற்படுவோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதற்கு ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் பலவீனப்படுத்தப் போவதில்லை.

அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினரை நாட்டு மக்கள் முழுமையாக அரசியலில் இருந்து புறக்கணித்துள்ளார்கள். ஆற்றாமையின் காரணமாகவே இவ்வாறு முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள். மக்களாணைக்கு மதிப்பளித்து எதிர்த்தரப்பினர் செயற்பட வேண்டும்.

சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment