அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியான ஜிம்மி காட்டர் (James Earl Jimmy Carter) காலமானார்.
1924 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி பிறந்த அவர் நேற்றையதினம் (29) மரணிக்கும்போது 100 வயதைக் கடந்திருந்தார்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவர், அமெரிக்க ஜனாதிபதிகளில் நீண்ட காலம் உயிர் வாழ்கின்ற முன்னாள் ஜனாதிபதி எனும் பெயரை பெற்று விளங்கினார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதிகளில் 100 வயதை கடந்த ஒரேயொருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதியாக 1977 முதல் 1981 வரை அவர் பதவியிலிருந்தார்.
ஜிம்மி காட்டர் தான் பதவியேற்று இரண்டாவது நாளில் வியட்நாம் போரில் தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
அத்துடன், ஜனாதிபதி பதவிக்கு பின்னர் அவர் வாழ்ந்த வாழ்க்கை பிரபலமானதாக கருதப்படுகின்றது.
அறக்கட்டளையொன்றை நிறுவிய அவர், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவ நடவடிக்கை எடுத்தார். அத்துடன், தேர்தல் கண்காணிப்பு, ஒரு சில நோய்களுக்கு எதிராக போராடுதல் உள்ளிட்ட விடயங்களில் அவ்வறக்கட்டளை செயற்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2002 இல் அவரது மனிதாபிமான செயற்பாடுகளை பாராட்டி அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
ஜிம்மி காட்டரின் இறுதிக் கிரியைகள் அவரது சொந்த ஊரான ப்ளைன்ஸில், அரச மரியாதையுடனான இறுதிச் சடங்குடன் இடம்பெறவுள்ளது. அவரது மனைவியான ரோசலின் அடக்கப்பட்ட கல்லறைக்கு அருகில் அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment