அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத்தை பிரதான தொழிலாக நம்பி வாழும் பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்கையை கொண்டுசெல்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாகவும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை (05) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த வாரமளவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னர், விவசாயிகள் தங்கள் வயல் நிலங்களை மீட்டெடுக்க நிறைய பணங்களை செலவு செய்யவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறான செலவீனங்களை மேற்கொள்வதற்கான பொருளாதார வசதிகளில்லாத நிலையே அவர்களிடம் காணப்படுகிறது.
சேதமடைந்த வயல்களுக்கு 40,000 ரூபா இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அது போதுமானதாக அமையாது என்பதை அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும்.
அதேபோல், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பாரியளவிலான கடலரிப்பினால் கடற்தொழில் நடவடிக்கைகள் கணிசமானளவு பாதிப்படைந்து மீனவ சமூகத்தின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி நிற்கிறது.
இவ்விடயம் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment