ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முஹம்மது நிசாம் காரியப்பர் பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் இன்று (18) பதவிச் சத்தியம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றதுடன், அன்றையதினம் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர்.
அதுவரை ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த நான்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
கடந்த 12 ஆம் திகதி இந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.
இதற்கமைய அந்த நான்கு உறுப்பினர்களில் அர்ஜுன சுஜீவ சேனசிங்க, முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது மற்றும் மனோ கணேஷன் ஆகிய மூவர் நேற்று (17) பதவிச் சத்தியம் செய்தனர்.
No comments:
Post a Comment