ஜனாதிபதி நிதியத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் கை வரிசை : பெயர் விபரங்களை சபையில் வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 18, 2024

ஜனாதிபதி நிதியத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் கை வரிசை : பெயர் விபரங்களை சபையில் வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

வறுமை நிலை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திலிருந்து அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பெருமளவிலானோர் பெருந்தொகை நிதியை பெற்றுக் கொண்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களது பெயர் விபரங்களை சபையில் வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த தகவல்களை பகிரங்கமாக வெளியிட்டார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், வறுமை நிலையிலுள்ள மக்களுக்காகவும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவுமே ஜனாதிபதி நிதியம் உள்ளதாக சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், அவ்வாறு 2005 முதல் 2024ஆம் ஆண்டு வரை அந்த நிதியத்திலிருந்து நிதியைப் பெற்றுக் கொண்டவர்கள் பெயர்களையும் சிலர் பெற்றுக் கொண்டுள்ள தொகையையும் சபையில் தெரிவித்தார்.

அதன்படி முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன ஒரு கோடி ருபாவும், கெஹலிய ரம்புக்வெல்ல ஒரு கோடி10 இலட்சம் ரூபாவும் பெற்றுள்ளதுடன் முன்னாள் பிரதமர் திமு.ஜயரட்ன 03 கோடி ரூபா என நிதியையும் பெற்றுள்ளதைக் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு மாத்திரமன்றி பல்வேறு வகையிலும் கஷ்டங்களை எதிர்நோக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, நாட்டிலுள்ள பிள்ளைகளுக்கு உதவக்கூடிய வகையில் ஜனாதிபதி நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நிதியத்தின் சட்டத்திற்கமைய அந்த நிதியமானது வறுமை நிலை மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், கல்விக்காக உதவவும், நாட்டுக்காக சேவை செய்துள்ளவர்களுக்காகவும் மற்றும் சிறந்த வேலைத்திட்டங்களுக்காகவும் உதவுவதற்கே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் அந்த நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளன. அதில் பெருமளவு அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றன.

அதன்படி பீ.ஹரிஷன், பியசேன கமகே, மனோஜ் சிறிசேன, பி.தயாரட்ன, முத்துக்குமாரன, வாசுதேவ நாணயக்கார, சரத் அமுனுகம, எஸ்.பி. நாவின்ன ஆகியோரின் பெயர்கள் அதில் காணப்படுகின்றன.

அதேவேளை இன்னும் சில பெயர்கள் அதில் காணப்படுகின்ற போதும் அவர்களின் முழுப் பெயரையும் அறிந்துகொள்ள சற்று கடினமாக உள்ளது. ஆனால் இவர்களாக இருக்கும் என்று ஊகித்துக் கொள்ள முடிகிறது.

அந்த வகையில் தயாசிறி ஜயசேக்கர, பியல் நிசாந்த டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, இசுறு தேவரப் பிரிய, ஜகத் குமார ஆகியோரின் பெயர்கள் அதில் உள்ளன.

அத்துடன் ஜயலத் ஜயவர்தன 10 இலட்சம் ரூபாவும், நாமல் குணவர்தன 10 இலட்சம் ரூபாவும், விதுர விக்கிரமநாயக்க 10 இலட்சம் ருபாவும் பெற்றுள்ளதுடன், ஜோன் அமரதுங்க 40 இலட்சம் ரூபாவும், ஏக்கநாயக்க 48 இலட்சம் ரூபாவும், ஜயந்த வீரசிங்க 90 இலட்சம் ரூபாவும், ராஜித சேனாரட்ண ஒரு கோடி இலட்சம் ருபாவும், கெஹலிய ரம்புக்வெல்ல ஒரு கோடி10 இலட்சம் ரூபாவும் பெற்றுள்ளனர். திமு.ஜயரட்ன 03 கோடி ரூபா என நிதியை பெற்றுள்ளனர்.

இவர்கள் இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் எந்த பிரிவில் என்ன வகையில் இதனைப் பெற்றுள்ளனர்? இவர்கள் இல்லாதவர்களா? முழு குடும்பமும் பெற்றுள்ளது. இவ்வாறுதான் கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன, கோத்தபய ராஜபக்‌ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்த நிதியத்தின் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். இவை திறைசேரியின் நிதியே. இவற்றை நாம் நாட்டு மக்களின் பிள்ளைகளுக்காக செலவிட முடியும்.

அதேவேளை 2022ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024 செப்டம்பர் வரையில் பிரதமர் அலுவலகத்தில் ஒரு கோடி 21 இலட்சம் ருபா பிரதமர் அலுவலகத்தின் மருத்துவ பிரிவு செலவினமாக இருந்துள்ளது.

இவ்வாறுதான் கடந்த அரசாங்கம் மக்கள் நிதியை தன்னிச்சையாக பயன்படுத்தியுள்ளது. தினேஷ் குணவர்தனவும் கூட இதனை செய்துள்ளார். இதனை நிறுத்தவே நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment