சர்வதேச பிணைமுறி பத்திரங்களில் இருந்து பெற்றுக் கொண்ட கடன்கள் மோசடியானது என்று விமர்சித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னரே கடன் செலுத்தலுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. ஆடை அணிந்து கொண்டா வணிக கடன் தொடர்பான ஒப்பந்தத்தை அரசாங்கம் கைச்சாத்திட போகிறது என்று கேட்க தோன்றுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தில் முறைமை மாற்றம் எதனையும் எதிர்பார்க்க முடியவில்லை. பாரம்பரிய விவசாய முறைமை தவறு என்றால் கூட்டு விவசாய முறைமைக்கு செல்ல வேண்டும். அதேபோல் கைத்தொழில் துறை தவறு என்றால் அரச கட்டமைப்புடனான கைத்தொழில் துறைக்கு செல்ல வேண்டும்.
ஜனாதிபதியின் கொள்கை உரையிலும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கையிலும் மாற்றம் ஏதும் கிடையாது. பொருளாதார பிரதி அமைச்சர் இடைக்கால கணக்கறிக்கையை முன்வைத்தார். ஆனால் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுவதற்கான அவசியம் மற்றும் செலவு முகாமைத்துவம் பற்றி சபைக்கு தெளிவுபடுத்தவில்லை.
உண்மையில் சொல்வதாயின் முறைமை ஏதும் மாற்றமடையவில்லை. அநுரவே மாற்றமடைந்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டவர்கள் இன்று செயற்திட்டத்தின் உள்ளடக்கத்தை ஆராயாமலே செயற்திட்டங்களை அமுல்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிக சிறப்புரிமைகள் காணப்படுகிறது. அதிகளவில் பாதுகாப்பு மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டது.
ஆனால் தற்போது அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இடைக்கால கணக்கறிக்கையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஜனாதிபதியின் விடயதானத்துக்கு 1.4 ரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 1.4 ரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. ஆகவே மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment