தெற்காசியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ! இலங்கையுடன் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க சீனா தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 15, 2024

தெற்காசியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ! இலங்கையுடன் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க சீனா தீர்மானம்

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயறபாடுகளை விரிவுபடுத்துவது குறித்து சீனா ஆர்வம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பாரிய முதலீட்டில் நிர்மாணிக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் உருவாக்கி இந்த பிராந்தியத்தில் எண்ணெய் ஆதிக்கத்தை மாற்றுவதற்கான திட்டமாகவே இது உள்ளது.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின்போது துறைமுக நகர் குறித்தும் ஆலோசிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக துறைமுக நகர் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக துரிதப்படுத்த சீனா தீர்மானித்துள்ளது.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மூலோபாய ஒத்துழைப்புகளை முன்னிலைப்படுத்தி சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கான விசேட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் பிரகாரம் பல சீன கப்பல்கள் இலங்கைக்கு வந்தன.

இருப்பினும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இராஜதந்திர நெருக்கடியால் சீனக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவது ஒரு வருட காலத்திற்கு நிறுத்தப்பட்டது.

அந்த கால எல்லை எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதன்படி ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் சீன கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும்.

ஆனால் சீன கப்பல்களுக்கு எத்தகைய அனுமதியை அரசாங்கம் கொடுக்கும் குறித்து உறுதியான நிலைப்பாடு இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.

மறுபுறம் இலங்கையை மையப்படுத்திய இந்திய - சீன இராஜதந்திர அழுத்தங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசாங்கத்தின் விசேட குழு ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment