(இராஜதுரை ஹஷான்)
போலியான கல்வித் தகைமையை சமர்ப்பித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் 07 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு பதவிகளில் இருந்து விலக வேண்டும். கலாநிதி என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலில் போட்டியிட்ட அசோக சபுமல் ரன்வல பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை பகுதியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்றத்தை சிரமதானம் செய்ய வேண்டும், படித்தவர்களால் பாராளுமன்றம் நிரப்பப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். நாட்டு மக்களும் தேசிய மக்கள் சக்திக்கு 159 ஆசனங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள்.
இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டே தேசிய மக்கள் சக்தி சார்பில் அசோக சபுமல் ரன்வல கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டார். அவ்வாறாயின் அசோக சபுமல் ரன்வல கம்பஹா மாவட்ட மக்களையும் ஏமாற்றியுள்ளார்.
மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய காரணத்தால்தான் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார். பொய்யான கல்வித் தகைமையை குறிப்பிட்ட அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? அசோக சபுமல் ரன்வலல பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
போலியான கல்வித் தகைமையை சமர்ப்பித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் 07 பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு பதவிகளில் இருந்து விலக வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் கல்வி தகைமை குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்றத்தில் பரீட்சைத் திணைக்களத்தின் கிளையையும், பல்கலைக்கழகங்களின் பிரதி கிளைகளையும் அமைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment