(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக மாத்திரம் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு எதிர்வரும் வாரத்தில் இருந்து நீக்கப்படும். பொலிஸ் பாதுகாப்பு மாத்திரம் வழங்கப்படும். அரச சொத்துக்களை தனிப்பட்ட தேவைக்களுக்காக பயன்படுத்த இடமளிக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆறு மாதத்துக்கு ஒருமுறை மீள் பரிசீலனை செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டமை தொடர்பில் ஒரு தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுவதை தெளிவுப்படுத்த வேண்டும்.
அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும், மக்களின் வரிப் பணத்தை அரசியல்வாதிகளுக்காக செலவு செய்வதையும் குறைக்க வேண்டும் என்பதை கருத்திற் கொண்டே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
அரசியல்வாதிகள் பரிவாரங்களுடன் வீதி சட்டதிட்டங்களை பின்பற்றாமல் செல்வதை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளை இல்லாதொழிக்க வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாடாகும்.
அரசியல்வாதிகள் பாதுகாப்பு தரப்பினருடன் செல்வதும், மக்களின் வரிப் பணத்தை வேண்டிய அளவு வீண்விரயம் செய்வது அரசியல் கலாச்சாரமாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பல கருத்துக்கள் குறிப்பிடப்படுவதை தெளிவுப்படுத்துவது அத்தியாவசியானது.
1986 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் உரித்துக்களுக்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சட்டத்தில் எந்தளவான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. பாதுகாப்பு போதுமானதாகவில்லை என்று குறிப்பிடுபவர்கள் எந்த அடிப்படையில் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதியரசர் சித்ரசிறி தலைமையில் குழு நியமிக்கப்பட்டு குழுவின் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தொழில்நுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு பாதுகாப்பு வழங்குமாறு குழு பரிந்துரைத்துள்ளது.
ஆகவே அரசியல் நோக்கங்களுக்காக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. தேவைக்கு மேலதிகமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளார்கள்.
பாராளுமன்றத் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட வங்குரோத்து நிலையடைந்த அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியான விடயங்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் இலக்காகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு 60 பொலிஸாரும், 228 இராணுவத்தினரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்கு 60 பொலிஸாரும், 40 இராணுவத்தினரும், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு 22 பொலிஸாரும், 188 இராணுவத்தினரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக்க 60 பொலிஸாரும், 58 இராணுவத்தினரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்புக்கு இராணுவத்தினர் வழங்கப்படவில்லை, 60 பொலிஸார் மாத்திரமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாசவின் பாதுகாப்புக்கு 10 பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அதிகளவில் நிதி செலவழிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு இராணுவம் 328 மில்லியன் ரூபா, பொலிஸ் 327 மில்லியன் ரூபா, ஜனாதிபதி செயலகம் 55 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 710 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாதுகாப்புக்கு இராணுவம் 6 மில்லியன் ரூபா, பொலிஸ் 185 மில்லியன் ரூபா, ஜனாதிபதி செயலகம் 16 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 207 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
கோட்டபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக இராணுவம் 258 மில்லியன் ரூபா, பொலிஸ் 39 மில்லியன் ரூபா, ஜனாதிபதி செயலகம் 10 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 307 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் செலவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வு பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்கு இராணுவம் 60 மில்லியன் ரூபாவையும், பொலிஸ் 19 மில்லியன் ரூபாவையும், ஜனாதிபதி செயலகம் 3 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளது. ஆகவே மொத்தமாக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்புக்கு இராணுவம் செலவு செய்யவில்லை. பொலிஸ் திணைக்களம் 99 மில்லியன் ரூபா, ஜனாதிபதி செயலகம் 12 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 111 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாசவின் பாதுகாப்புக்காக பொலிஸ் 30 மில்லியன் ரூபாவையும், ஜனாதிபதி செயலகம் 3 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 33 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஆகவே இந்த ஆண்டு 11 மாதமும் 15 நாட்களுக்கு மாத்திரம் 1448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு முறையாக மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தளவுக்கு ஏன் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் வீட்டு பணிகளுக்காக பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்க முடியாது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு எதிர்வரும் வாரம் முதல் நீக்கப்படும். பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படும்.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு 60 பொலிஸாரும், 1 பொலிஸ் வாகனமும், ஜனாதிபதி செயலகத்தின் 3 வாகனங்களும் வழங்கப்படும்.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு 22 பொலிஸாரும், 1 பொலிஸ் வாகனமும், ஜனாதிபதி செயலகத்தின் 3 வாகனங்களும் வழங்கப்படும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 60 பொலிஸாரும், 1 பொலிஸ' வாகனமும், 3 ஜனாதிபதி செயலக வாகனங்களும் வழங்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்கு 60 பொலிஸாரும், 1 பொலிஸ் வாகனமும், ஜனாதிபதி செயலகத்தின் 3 வாகனங்களும் வழங்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயவின் பாதுகாப்புக்கு 60 பொலிஸாரும், 1 பொலிஸ் வாகனமும், 3 ஜனாதிபதி செயலக வாகனங்களும் வழங்கப்படும்.
அதேபோல் ஹேமா பிரேமதாசவின் பாதுகாப்புக்கு 10 பொலிஸாரும், 1 பொலிஸ் வாகனமும், ஜனாதிபதி செயலகத்தின் 3 வாகனங்களும் வழங்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதத்துக்கொருமுறை மீள் பரிசீலனை செய்யப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை இவ்வாறு குறைப்பதால் வருடத்துக்கு 1200 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும். போலியான குற்றச்சாட்டுக்களுக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணியப் போவதில்லை. ஒட்டு மொத்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.
No comments:
Post a Comment