மஹிந்தவின் பாதுகாப்பை பலப்படுத்த குரல் கொடுத்த அநுரகுமார தற்போது ஜனாதிபதியானதும் மறந்துவிட்டார் - மனோஜ் கமகே - News View

About Us

About Us

Breaking

Sunday, December 15, 2024

மஹிந்தவின் பாதுகாப்பை பலப்படுத்த குரல் கொடுத்த அநுரகுமார தற்போது ஜனாதிபதியானதும் மறந்துவிட்டார் - மனோஜ் கமகே

(எம்.வை.எம்.சியாம்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அநுரகுமார திசாநாயக்க, தற்போது ஜனாதிபதியானதன் பின்னர் அதனை மறந்துவிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த தீர்மானத்தை மீளப் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் கொழும்பு மாவட்ட உப தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வரப்பிரசாதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இதன் முதற்கட்டமாக அவர்களது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நிமித்தம் கடமையில் இருந்த 116 உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் கொழும்பு மாவட்ட உப தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பல வருடங்களாக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 116 உத்தியோகத்தர்கள் ஒரே தடவையில் நீக்கப்பட்டுள்ளனர். உண்மையில் இந்த 116 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்ட பின்னணியில் பாரிய சூழ்ச்சி உள்ளது என நாம் நம்புகிறோம்.

விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதியின் உணவை சோதனையிட்டவர்கள் கூட அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கான சூழலை எவருக்கேனும் ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கிறார்களா? என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது. இந்த பாராதூரமான நிலைமை தொடர்பில் இந்த அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றோம்.

இந்த ஜனாதிபதி 2007ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய உரையாற்றினார். அன்று ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் போராடினார். ஆனால் இன்று ஜனாதிபதியாகிதன் பின்னர் அதனை அவர் மறந்து விட்டார்.

எனவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த தீர்மானத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும். இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஆகும் என்றார்.

No comments:

Post a Comment