அநுராதபுர வீதி விபத்தில் ஒருவர் பலி : வைத்தியாலையில் 5 பேர் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய கடை உரிமையாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2024

அநுராதபுர வீதி விபத்தில் ஒருவர் பலி : வைத்தியாலையில் 5 பேர் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய கடை உரிமையாளர்

அநுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (14) அதிகாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற இவவிபத்தில், மாம்பழம் சேகரிக்கச் சென்ற பட்டா ரக லொறியும், கல் ஏற்றிச் சென்ற மூவர் ரக லொறியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

தம்புத்தேகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த பட்டா வாகனம், அநுராதபுரம் நோக்கிச் சென்ற லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.

இவ்விபத்தில் இரண்டு லொறிகளும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், வீதியருகே இருந்த கடை ஒன்றின் மீது லொறி மோதி, வீதியருகே இருந்த பெரிய மரமொன்றின் மீதும் மோதியுள்ளது. குறித்த லொறியில் இருந்த கற்கள் அருகே உள்ள கால்வாயில் உருண்டு வீழ்ந்துள்ளது.

விபத்து நடந்தபோது வீதி அருகில் உள்ள குறித்த கடையில் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்துள்ள நிலையில், லொறியுடன் சேர்ந்து அவர் இழுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவருக்கு பாரிய காயங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் இருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதில் பட்டா வாகனத்தில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, தற்போது ஒருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும் மேலும் நான்கு பேர் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(திசர சமல் – அநுராதபுரம்)

No comments:

Post a Comment