தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 179 பேர் மரணித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தென் மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜெஜு (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 எனும் பயணிகள் விமானமானது இன்று (29) முற்பகல் 175 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 181 பேருடன் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தென் கொரியாவின் முவான் (Muan) நகரின் விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
ஓடு பாதையில் அதன் வயிற்றுப் பகுதி உரசியவாறு தரையிறங்குவதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களில் காணக் கூடியதாக இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து ஓடுபாதையில் தொடர்ச்சியாக நிறுத்தாமல் பயணிக்கும் குறித்த விமானம், தடுப்பு வேலியொன்றில் மோதி தீப்பிழம்புடன் வெடிப்பதை காணக் கூடியதாக உள்ளது.
குறித்த விபத்தைத் தொடர்ந்து 20 இற்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் பலி எண்ணிக்கை 60 எனவும் பின்னர் 85 எனவும் பின்னர் 120 எனவும் பின்னர் 167 எனவும் தற்போது வரை 179 பேர் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்குவதற்கு முன்பாக விமானத்திற்கு என்ன நடந்தது? உள்ளே இருந்த பயணி ஒருவர் தனது உறவினருக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தியில் பகிர்ந்த முக்கிய தகவல் என்ன?
இந்த விபத்தில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
ஆனால், பறவை மோதல் அல்லது மோசமான வானிலை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை ஊகிக்கிறது
இந்த விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று முவான் தீயணைப்புத் துறையின் தலைவர் லீ ஜியோங்-ஹியூன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
"விமானத்தின் வால் பகுதி அப்படியே இருக்கிறது. ஆனால் விமானத்தின் மற்ற பகுதிகளின் வடிவத்தை யாராலும் அடையாளம் காண முடியவில்லை", என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக் கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது.
80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
தற்போது முவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
விமானத்தில் இருந்த பயணியின் கடைசி குறுஞ்செய்தி
விமானம் விபத்தில் சிக்குவதற்கு சற்று முன்பாக, அதில் இருந்த பயணி ஒருவர் தனது குடும்ப உறுப்பினருக்கு செல்போனில் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த குறுஞ்செய்தியில், விமானத்தில் இறக்கையில் ஒரு பறவை மோதியதாக அந்த பயணி குறிப்பிட்டிருந்தார் என்கிறது அந்த செய்தி.
அத்துடன், "எனது கடைசி வார்த்தைகளை அனுப்ப வேண்டுமா?" என்றும் குறுந்தகவலில் அந்த பயணி கூறியிருந்ததாக உள்ளூர் ஊடகம் கூறுகிறது.
அதன் பிறகு, விமானத்தில் இருந்த அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற உறவினர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பேரிடர் மண்டலமாக அறிவிப்பு
தென் கொரியாவின் இடைக்கால ஜனாதிபதி சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை "ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக" அறிவித்துள்ளார்.
"இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அவர் கூறினார்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொது வெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மண்ணிப்பு கேட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார்.
மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது.
முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.
ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும்.
தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
No comments:
Post a Comment