தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்க அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஜனாதிபதி - செல்வம் அடைக்கலநாதன் - News View

About Us

About Us

Breaking

Monday, November 11, 2024

தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்க அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஜனாதிபதி - செல்வம் அடைக்கலநாதன்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் அவர் தற்போது தெரிவித்துவரும் கருத்து தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் அரசியல் நாடகம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை (11) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி பல கூட்டங்களில் தமிழ் தலைவர்கள் தன்னோடு எந்த விடயத்திலும் கலந்துரையாடுவதில்லை. அதனால் தற்போது பஸ் சென்று விட்டது. இனி யாருடைய தயவும் தேவையில்லை அந்த பஸ் ஓடும் என்று கூறியிருக்கின்றார். இந்த நேரத்தில் நான் ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன்.

ஜேவிபி இந்த பாராளுமன்றத்திலே அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ளாது. அந்த நேரத்திலே ஓடுகின்ற பஸ்ஸை நிறுத்தி ஆளுமையுள்ளவர்களை ஏற்றிச் செல்ல வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். அவ்வாறுதான் அவர் இந்த அரசாங்கத்தை கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.

தற்போது ஜனாதிபதி அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்று கூறி இருக்கின்றார். இதிலிருந்து அவர் தமிழ் மக்களுடைய வாக்குகளை கபளீகரம் செய்வதற்கான அரசியல் நாடகமொன்றை நடத்துகின்றார் என்பது தெரிகிறது.

ஜனாதிபதியை பொறுத்த வரைக்கும் பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே கைதிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இருக்கின்றது. ஆனால் இவரும் கடந்த ஜனாதிபதிகள் போன்று அரசியலுக்காக கருத்துக்களை கூறுவதாகத்தான் இருக்கின்றது.

இதனூடாக தெரிய வருவதானது, கடந்த ஜனாதிபதிகள் போன்றே இவரும் செயற்படுவார் என்பதுதான் தெட்டத் தெளிவாகின்றது. ஆகவே மக்கள் இவருடைய பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாறக்கூடாது.

ஜனாதிபதி நினைத்தால் தற்போதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியும். இந்த தேர்தல் முடிந்ததன் பின்னர்தான் விடுதலை செய்ய வேண்டும் என்கின்ற தேவை இல்லை.

ஆகவே அரசியல் கைதிகள் விடயத்தில் அவர் தமிழ் மக்களின் வாக்குகளை சுவீகரிப்பதற்கான அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார் என்பதை வெளிப்படை என்றார்.

No comments:

Post a Comment