மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எமது மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட தற்போது தேசிய மக்கள் சக்தி மீதான ஆதரவு அதிகரித்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.
காத்தான்குடியின் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், குறிப்பாக முஸ்லிம் பகுதிகளில் பிரதான அரசியல்வாதிகள் சிலர் போட்டியிடாத நிலையில் அவர்களது ஆதரவாளர்களும் தற்போது எமது கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். தமிழ் பிரதேசங்களிலும் பாரம்பரிய தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையிழந்த மக்கள் தேசிய மக்கள் சக்தியையே தமது தெரிவாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை இலகுவாகப் பெற்று ஒரு ஆசனத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். இரண்டாவது ஆசனத்தையும் பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அநுரவுக்கு வாக்களிக்காத மக்கள் தற்போது கைசேதப்படுகின்றனர். இனவாதமற்ற, நாட்டின் மீது தூய்மையான அன்பு கொண்ட ஒரு தலைவருக்கு வாக்களிக்காது விட்டோமே என அவர்கள் கவலைப்படுகின்றனர்.
அவ்வாறானவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி தமது வரலாற்றுக் கடமையை செய்வதன் மூலம் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் பங்காளிகளாக அவர்களும் மாற முடியும்.
நான் கடந்த பல வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமயத் தலைவர்களோடு இணைந்து சகவாழ்வுக்காக பாடுபட்டு வருகின்றேன். அதன் மூலம் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவ சமயத் தலைவர்களுக்கு மத்தியில் எனக்கு சிறந்த உறவு உள்ளது. அதனைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்க பாடுபடுவேன் என்றார்.
No comments:
Post a Comment