பெண்ணிடம் பாலியல் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, November 22, 2024

பெண்ணிடம் பாலியல் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காட்டி மிரட்டி பாலியல் கப்பம் மற்றும் 12 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றையதினம் வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண்ணொருவர் தனது காதலனுடன் இருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

படங்களை வைத்து பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவரது வீட்டுக்கு சென்று தாம் கொழும்பில் இருந்து வந்துள்ள பொலிஸ் விசேட பிரிவினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவரது தொலைபேசி இலக்கங்களை பெற்றுச் சென்றுள்ளனர்.

பின்னர் விசாரணைகளின் அடிப்படையில், சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், அவற்றை தவிர்ப்பதாயின் 12 இலட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்பதுடன், தாம் இருவரும் அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும் என பெண்ணை தொலைபேசி ஊடாக மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுன்னாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment