யாழ்ப்பாணம் பலாலி வீதி - வசவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று (01) காலை ஆறு மணி முதல் அனுமதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோ மீற்றர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் காணப்பட்ட வீதித் தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி - அச்சுவேலி பிரதான வீதியை இன்று (01) திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டதுடன், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை.
இந்த வீதியை திறப்பது தொடர்பில் வட மாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஆளுநர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகமும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்படி, இந்த வீதியை திறப்பது தொடர்பிலுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்ததோடு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலையீட்டின் பேரில் இந்த வீதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment