ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களையும் தங்கள் சுய இலாப அரசியலிற்காக, இனவாத அரசியலிற்காக, அடக்குமுறைக்காக அவர்களின் வாழ்க்கையை சிதைக்கின்ற ஒரு முயற்சியின் அங்கமாக பயங்கரவாத தடைச் சட்டம் இருக்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான ராஜ்குமார் ராஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வைத்தியர் ஷாபியின் மகள் கா.பொ.த. சாதாரண தரத்தில் 9 A தர சித்திகளை பெற்றுள்ளார். இன்று அவரை பலர் பாராட்டுகின்றனர்.
பாத்திமா என்ற அந்த மாணவி குருநாகலில் ஒரு பாடசாலையில்தான் கல்வி கற்றார். சிங்களத்தில்தான் கல்வி கற்றார்.
ஆனால் அவருக்கு நடந்தது என்ன ? அவரது தந்தை மீது பொய்யானதொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் கட்டாய கருத்தடை செய்வதாக இனத்தை அழிப்பதாக, போலியான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு, அந்த குடும்பம் தனது வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியாத வகையில் ஒரு அடக்குமுறைக்கு உள்ளானார்கள்.
பின்னர் வைத்தியர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அந்த மாணவி குருநாகலில் இருந்து படிப்பதற்காக கொழும்பிற்கு வந்தார். கொழும்பில் மீண்டும் அவருக்கு பிரச்சினை வரும் என கருதி கல்முனைக்கு சென்றார். கல்முனையிலிருந்து கண்டிக்கு சென்றார்.
இப்படி ஒன்பதாம் தரத்திலிருந்து பத்தாம், பதினொராம் தரம் வரை நான்கு பாடசாலைகளிற்கு மாற்றம் பெற்றார் பின்னர் தனது மனோ வலிமையால் 9 A தர சித்திகளை பெற்றார்.
இந்த நாடு அந்த குடும்பத்திற்கு கடமைப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்க வேண்டிய கடமையுள்ளது.
அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலிற்கு, அவர்கள் அந்த இரண்டு மூன்று வருடங்களாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செலுத்த முடியாத, ஒரு மோசமான நிலைக்குள் சென்றார்கள் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோமா என்ற கேள்வியை நாங்கள் அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
இப்படி ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களையும் தங்கள் சுய இலாப அரசியலிற்காக இனவாத அரசியலிற்காக அடக்குமுறைக்காக அவர்களின் வாழ்க்கையை சிதைக்கின்ற ஒரு முயற்சியின் அங்கமாக பயங்கரவாத தடைச் சட்டம் இருக்கின்றது என்பதை நாங்கள் மறந்துவிட முடியாது.
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றுமுழுதாக இந்த நாட்டை விட்டு அகலும் வரை ஒரு மனிதன் தனக்கான ஒரு போராட்டத்தை வீதியில் இறங்கி செய்ய முடியாத நிலை உள்ளது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment