ஜனாதிபதி விழாமல் தாங்கிக் கொள்ளும் தூணாக பாராளுமன்றத்தை தெரிவு செய்ய வேண்டாம் - சரித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2024

ஜனாதிபதி விழாமல் தாங்கிக் கொள்ளும் தூணாக பாராளுமன்றத்தை தெரிவு செய்ய வேண்டாம் - சரித ஹேரத்

ஜனாதிபதி விழாமல் தாங்கிக் கொள்வதற்கான தூணாக பாராளுமன்றத்தை தெரிவு செய்து விட வேண்டாம். ஜனாதிபதிக்கான பாராளுமன்றத்தை அன்றி நாட்டுக்கான பாராளுமன்றத்தை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அதியுயர் அதிகாரத்தை வழங்கக்கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்றத் தேர்தலுக்கு 14 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

தற்போது தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைத்துள்ள ஜனாதிபதி பதவியை பலப்படுத்துவதற்கு சிறந்த பாராளுமன்றத்தை வழங்குமாறு கோருகின்றனர்.

பாராளுமன்றம் என்பது அரசியலமைப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அரசியலமைப்பில் பாராளுமன்றத்துக்கும் அப்பால் அதிகாரமுள்ள நிறுவனங்கள் இல்லை. பாராளுமன்றமானது மக்களுக்கான நிறுவனமாகும்.

முந்தைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தமக்கு அநாவசியமானவை என அரசாங்கம் கூறுகின்றது. அமைச்சரவை தீர்மானங்களை மாற்ற முடியும். ஆனால் அவை எமக்கு தேவையற்றவை எனக்கூற முடியாது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உதாசீனப்படுத்த முடியாது என்பதை பிரதமருக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அமைச்சரவை தீர்மானங்களில் அதிகாரிகளை உள்ளீர்த்து அந்த கட்டமைப்பை குழப்ப வேண்டாம் என்றும் பிரதமரைக் கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் மீளாய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும், கடந்த அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூற முடியாது.

கடந்த அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்றால், புதிய தீர்மானத்தை எடுத்தேனும் அதனை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

இவை தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் வேறு, பொதுத் தேர்தல் வேறு. எனவே ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்தல் குறித்து சிந்திக்க வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்துகின்றோம்.

மாறாக ஜனாதிபதி விழாமல் தாங்கிக் கொள்வதற்கான தூணாக பாராளுமன்றத்தை தெரிவு செய்து விட வேண்டாம்.

ஜனாதிபதிக்கு ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான பாராளுமன்ற அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் அந்த அதிகாரம் உச்சபட்சமானதாகக் காணப்படக்கூடாது.

ஆனால் பொறுத்தமற்றவர்களை இம்முறைத் தேர்தலில் மக்கள் புறக்கணிக்கலாம். எனவே ஜனாதிபதிக்கான பாராளுமன்றத்தை அன்றி நாட்டுக்கான பாராளுமன்றத்தை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment