IMF உடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் : பிரதேச சபையைக்கூட காணாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியுமா? - ரணில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 29, 2024

IMF உடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் : பிரதேச சபையைக்கூட காணாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியுமா? - ரணில்

(எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளும் தற்போதைய கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் சில தினங்களுக்குள் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விடயங்கள் எதனையும் நாட்டுக்கு மறைக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றுமுன்தினம் அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு, பொருளாதாரம் தொடர்பில் தீர்மானங்கள் எடுப்பது பாராளுமன்றத்திலாகும். அதனால் நாட்டை நிர்வகிக்க முடியுமான அனுபவமுள்ள அணியொன்றை கொழும்பு மாவட்டத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் களமிறக்கியுள்ளோம். 

அனுபவமுள்ளவர்களையே பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு இல்லாமல் பிரதேச சபையைக்கூட காணாதவர்களை பாராளுமன்றத்தில் வைக்க முடியுமா?

நாங்கள் நாட்டை பொறுப்பேற்கும்போது நாட்டின் பொருளாதாரம் சுருங்கி இருந்தது. என்றாலும் 2023 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டாகும்போது சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மூலம் நாட்டின் பொருளாதாரம் சுருங்கிவிடுவதை நிறுத்தினோம். அன்று முதல் இன்று வரை பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்பட்டுவந்தது.

அதேபோன்று எமது வெளிநாட்டு செலாவணியை பெற்றுக் கொள்ளும் பிரதான பிரிவான வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா வியாபாரம், ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் இருந்துவரும் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள எங்களுக்கு முடியுமாகியது. 

அதேபோன்று வெளிநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் வரையறையை நீக்கிக் கொள்ள முடியுமாகியது. அத்துடன் பணவீக்கத்தை குறைத்தோம். செப்டெம்பர் மாதமாகும்போது நாடு சாதாரண நிலைமைக்கு வந்திருந்தது.

மேலும் நூற்றுக்கு 30 வீதமாக இருந்த வட்டி வீதத்தை நூற்றுக்கு 10 வீதத்துக்கு குறைத்தோம். வெளிநாட்டு கையிருப்பை 6 பில்லியன் டொலர் வரை அதிகரித்திருக்கிறோம். பணம் அச்சிடுவதை நிறுத்தினோம். நாங்கள் அரசாங்கத்தை பாெறுப்பேற்கும்போது அரச மொத்த வருமானம் 8.3 ஆகும் 2023 ஆம் ஆண்டாகும்போது அது 11.1ஆக அதிகரித்திருந்தது.

வரவு செலவு திட்ட துண்டுவிழும் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 12 இல் இருந்து நூற்றுக்கு 8.3 வரை குறைத்திருக்கிறோம். 380 ரூபாவுக்கு இருந்த டொலரை 300 ரூபா வரை குறைத்திருக்கிறோம். 

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை தயாரிக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தோம். அதனை தயாரிக்க முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டை தெரிவிக்க அரசாங்கம் இருந்தது. அதனை மாத்திரமே செய்ய இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் குழு நாட்டுக்கு வந்தபோது அரசாங்கம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கவில்லை. நியூயோர்க்கிற்கு சென்று கலந்துரையாடுவதாக அவர்கள் தெரிவித்தார்கள். 

இரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகையில், தற்போதும் பொருளாதார ஆலோசகர்கள் உள்ளிட்ட நிதி அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதாகவே தெரிவித்தார்.

பிரயோசனமுள்ள வரவு செலவு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக அவர்கள் முன்வைத்திருக்கும் யோசனைகள் தொடர்பில் பேசுவதாகவும் தெரிவித்தார். 

என்றாலும் கலந்துரையாடல் முடிவடையவில்லை எனவும் அடுத்த வரவு செலவு திட்டத்துக்கு பின்னர் அந்த கலந்துரையாடல் முடிவடையும் எனவும் ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன.

அனைத்து விடயங்களும் சரி என தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க, தற்போது அனைத்து விடயங்களையும் என்மீது சுமத்த முயற்சிக்கிறார். இந்த ஒப்பந்தங்களுக்கு தற்போது என்ன நடந்திருக்கின்றன. நாங்கள் இந்த அனைத்து விடயங்களையும் முறையாக தயாரித்திருந்தோம். இறுதி கையெழுத்திட மாத்திரமே அவர்களுக்கு இருந்தது. 

கொழும்பில் இணக்கப்பாட்டை தெரிவித்து வரவு செலவு திட்டத்தை தயாரிக்கவே அவர்களுக்கு இருந்தது. ஆனால் மேலும் கலந்துரையாட வேண்டும் என தற்போது தெரிவிக்கிறார். அவர்கள் தற்போது மேற்கொள்ளும் கலந்துரையாடல் என்ன? அதனை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

அடுத்த வருட வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதாக இருந்தால், நாங்கள் கடந்த வரவு செலவு திட்டத்துக்கு 4,000 பில்லியன் ரூபா பெற்றுக் கொண்டோம். இறுதி காலமாகும்போது எமது வருமானம் 3,700 பில்லியன் ரூபாவாக இருந்தது. இந்த வருடத்துக்குள் மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 13 வீத வருமானத்தை பெற்றுக் கொள்ள நாங்கள் இலக்கு வைத்திருந்தோம். 

2028 க்குள் கடனை அடைக்க முடியும் என உறுதியளித்ததாலே எமக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த வருடத்தில் நூற்றுக்கு 15 வீதம் அடிப்படையில் வருமானம் பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்த அரசாங்கம் முன்வைத்திருக்கும் பிரேரணைகளை செயற்படுத்த முடியுமா? அவர்களின் புதிய யோசனைகள் அனைத்தையும் முன்வைப்பதாக இருந்தால் நாட்டின் செலவு சுமார் 5,600 பில்லியனாக அமையும். அடுத்தபடியாக நாட்டின் வருமானம் 3,000 பில்லியன் ரூபா வரை வீழ்ச்சியடையும். அதன்போது வரவு செலவு துண்டுவிழும் தொகை 1,000 பில்லியன் ரூபாவா வரை அதிகரிக்கும். அதன்போது நிதி தேடிக்கொள்வது எவ்வாறு? பணம் அச்சிடவும் முடியாது. பணம் அச்சிடுவதில்லை என சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கி இருக்கிறோம். நினைத்த பிரகாரம் கடன் பெறவும் முடியாது.

எனவே இது தொடர்பில் உடனடியாக ஜனாதிபதி நாட்டுக்கு அறிவிக்க வேண்டும். நான் ஜனாதிபதியாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடினால் வேறு முக்கியமான தீர்மானங்களை எடுத்தால், பாராளுமன்றத்துக்கு அல்லது நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறேன். ஆனால் இதுவரை ஜனாதிபதி எதனையும் தெரிவித்ததில்லை. 

அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் தூக்குழு வந்ததன் பின்னர் அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் உண்மை நிலைமை தொடர்பில் எதிர்வரும் சில தினங்களுக்குள் நாட்டுக்கு அறிவிக்கும் கடப்பாடு ஜனாதிபதிக்கு இருக்கிறது.

நாங்கள் தெரிவிக்கும் புள்ளிவிபரங்கள் பிழை என்றால் அவற்றை சரி செய்யுங்கள். இந்த விடயங்களை நாட்டுக்கு மறைக்க வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment